திருமயம் காலபைரவர் கோயிலில் அமித் ஷா வழிபாடு!
தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு காலபைரவரை வழிபட்ட உள்துறை அமைச்சர்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை திருமயத்திலுள்ள காலபைரவர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வியாழக்கிழமை மாலை 4 மணிக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
இதற்காக வாரணசியில் இருந்து தனி விமானம் மூலம் மாலை 2.30 மணிக்கு திருச்சி விமான நிலையம் வந்த அவர், ஹெலிகாப்டர் மூலம் காரைக்குடி அருகேயுள்ள கானாடுகாத்தானில் இறங்கி, அங்கிருந்து கார் மூலம் மாலை 3.30 மணிக்கு திருமயம் வந்தார்.
திருமயம் கோட்டையில் குடைவரையாக உள்ள பள்ளி கொண்ட பெருமாள், ராஜராஜேஸ்வரி உடனுறை சத்தியகிரீஸ்வரர் மற்றும் சத்தியமூர்த்தி பெருமாள், வேனுவனேஸ்வரி உடனுறை உமாமகேஸ்வரர் கோவில்களில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
Advertisement
Advertisement
தொடர்ந்து, திருமயம் கோட்டை காலபைரவர் கோயிலிலும் அமித்ஷா சாமி தரிசனம் செய்தார். இந்தக் கோவில்களில் அமித்ஷா மற்றும் அவரது குடும்பத்தினர் பெயர்களில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் அவரது மனைவி மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை, மூத்த தலைவர் ஹெச். ராஜா உள்ளிட்டோரும் வந்திருந்தனர். மாலை 4.15 மணிக்கு சுவாமி தரிசனங்களை முடித்துக் கொண்டு மீண்டும் கார் மூலம் கானாடுகாத்தான் திரும்பினார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் திருச்சி புறப்பட்டார்.
உள்துறை அமைச்சர் வருகையையொட்டி திருமயம் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பிற்பகல் முதலே வழக்கமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் அனுமதிக்கப்படவில்லை.