திருப்பூர்: கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதிலும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியில் வரும் நபர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் சுகாதாரத் துறை, வருவாய் துறை மற்றும் காவல் துறை இணைந்து பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அதை பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து கடுமை காட்டி வருகின்றனர். ஆனால் பொது மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லாததால் சமூக விலகல் விதிமுறைகளை பலரும் உதாசீனப்படுத்தும் நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில் தாராபுரம் வட்டாட்சியர் கனகராஜன், காவல்துறை ஆய்வாளர் கோபிநாத் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது தாராபுரம் உடுமலை சாலை, அலங்கியம் சாலை, வசந்தா சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மளிகை, பேன்சி கடைகளில் இதற்கு முன் பல முறை அதிகாரிகள் நேரில் சென்று எச்சரிக்கை விடுத்தும் சமூக விலகலை கடைபிடிக்காமல் பொதுமக்களை நெருக்கமாக நீண்ட நேரம் நிறுத்தி வைத்து வியாபாரம் செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து மளிகை கடைகள், பேன்ஸி ஸ்டோர் உட்பட 12 கடைகளை அதிகாரிகள் இழுத்து மூடி சீல் வைத்தனர். மேலும், நோய்த் தொற்றை தடுக்கும் விதிமுறைகளை மீறி சீலிடப்பட்ட வியாபார நிறுவனங்களை திறந்தால் அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.