ஒகேனக்கல் வனப் பகுதியில் யானை மிதித்து ஆடு மேய்ப்பவர் பலி
பென்னாகரம் அருகே வனப் பகுதியில் யானை மிதித்ததில் ஆடு மேய்ப்பவர் உயிரிழந்தார்.
பென்னாகரம்: பென்னாகரம் அருகே வனப் பகுதியில் யானை மிதித்ததில் ஆடு மேய்ப்பவர் உயிரிழந்தார்.
உணவு மற்றும் தண்ணீர் தேடி ஆண்டுதோறும் கர்நாடக வனப் பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி மற்றும் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு யானைகள் கூட்டம் கூட்டமாக இடம் பெயர்கின்றன.
தற்போது ஒகேனக்கல் வனப் பகுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட யானைகள் உலவுகின்றன. வனப்பகுதியில் உள்ள யானைகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்துறையின் மூலம் கட்டப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளுக்கும் மற்றும் ஒகேனக்கல் காவிரி ஆற்றுப் பகுதிக்கும் செல்கின்றன.
பென்னாகரம் அருகே அரண்மனைப் பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 38). இவர் சுமார் 30-க்கும் மேற்பட்ட ஆடுகளை வனப்பகுதியில் மேய்த்தும், விற்பனை செய்யும் தொழிலும் செய்து வந்தார். இவர் புதன்கிழமை மாலை ஒகேனக்கல் வனப் பகுதியான ராசிக் குட்டை பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்ற போது, வனப்பகுதியில் இருந்து வந்த யானைக் கூட்டமானது செல்வத்தை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபற்றித் தகவலறிந்த ஒகேனக்கல் வனத்துறையினர் ராசிக் குட்டை பகுதிக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்துகிடந்த செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளோம். பரிசோதனை அறிக்கை வந்த பிறகே யானை மிதித்து உயிரிழந்துள்ளாரா என்று உறுதி செய்ய முடியும் என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.