சென்னை: பிரபல திரைப்பட இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான கே.வி ஆனந்த்(54) மாரடைப்பால் வெள்ளிக்கிழமை காலமானார். மாரடைப்பால் திரையுலகில் நடிகர் விவேக் உயிரிழந்த சோகம் தணிவதற்குள், மற்றொரு திரை ஆளுமை மறைந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கரோனா தொற்று பாதிப்புக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கே.வி. ஆனந்த் வேறு எந்த நோய் அறிகுறிகளும் இல்லாத நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பத்திரிகைகளில் புகைப்பட கலைஞராக வாழ்க்கையை தொடங்கிய கே.வி. ஆனந்த், ஒளிப்பதிவாளராக தனது முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றார்.
பிரித்வி ராஜ், ஶ்ரீகாந்த் நடிக்க கணா கண்டேன் படத்தை முதன்முதலாக இயக்கி இயக்குநராக அவதாரம் எடுத்த கே.வி. ஆனந்த், அயன், கோ, மாற்றான், அனேகன், கவண், காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய பல படங்களில் நடிகர் சூர்யாவை ஹீரோவாக வைத்து இயக்கியவர்.
தற்போது சென்னை ராமாபுரம் மியாட் மருத்துவமனையில் உள்ள அவரது உடல் காலை 9 மணிக்கு மேல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படும் எனவும், பின்னர் அவரது சென்னை அடையாறில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துவரப்படும் என தெரிகிறது.