முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டுப்பாளையம் அருகே 1250 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

மேட்டுப்பாளையம் அருகே வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1250 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்

Updated On : 29 ஜூலை, 2021 at 9:50 AM
பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மற்றும் இருசக்கர வாகனம்.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 9:17 AM

மேட்டுப்பாளையம் அருகே வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1250 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இருசக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அருகே பெள்ளேபாளையம் வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக வருவாய்த்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. இதனையடுத்து  வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதிக்கு விரைந்த மேட்டுப்பாளையம் துணை வட்டாட்சியர் பாலமுருகன், வட்ட வழங்கல் அலுவலர் செல்வராஜ் தலைமையிலான வருவாய்த்துறையினர் அப்பகுதியில் ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது சிறுமுகை அன்னூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் ரேசன் அரிசியை கடத்தி கொண்டு சென்றவரை பின் தொடர்ந்து சென்ற அதிகாரிகள் வெள்ளிக்குப்பம்பாளையத்தில் அவர் அரிசியை பதுக்கி வைத்திருந்த இடத்திற்கு சென்றதும் கையும் களவுமாக பிடித்தனர். 

Advertisement

சட்டவிரோதமாக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1250 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர்.

வெள்ளிக்குப்பம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு குடிசையில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசியை அந்த நபர் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து வருவாய்த்துறையினர் அக்குடிசையில் சோதனை நடத்தியதில் 1,250 கிலோ ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவனது பெயர்  லோகநாதன் என்பதும் அன்னூர் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. 

இதனையடுத்து லோகநாதனை சிறுமுகை காவல் துறையினரிடம் வருவாய்த்துறையினர் ஒப்படைத்தனர். போலீசாரின் விசாரணையில் ரேஷன் அரிசியை கேரளாவிற்கு கடத்த இருந்தது தெரியவந்தது. காவல்துறையினர் லோகநாதன் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.