‘கிணத்த காணோம்’ நகைச்சுவை காட்சியின் மூலம் பிரபலமடைந்த நகைச்சுவை நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் செவ்வாய்க்கிழமை காலமானார்.
1985ஆம் ஆண்டு இயக்குநர் பாண்டியராஜன் இயக்கிய ஆண் பாவம் மூலம் தமிழ் திரை உலகத்தில் அறிமுகமானவர் நெல்லை சிவா. இவர் பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர பாத்திரத்திலும் நடித்துள்ளார்.
தமிழின் முன்னணி நகைச்சுவை நடிகரான வடிவேலுவுடன் பல்வேறு நகைச்சுவை காட்சிகளில் இணைந்து நடித்துள்ள நெல்லை சிவா கிணத்த காணோம் எனும் நகைச்சுவைக் காட்சியின் மூலம் பிரபலமடைந்தார்.
இந்நிலையில் நெல்லையில் வசித்துவந்த இவர் திடீர் மாரடைப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். அவரது மறைவிற்கு திரைத்துரையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.