பிரபல காப்பீட்டு நிறுவனத்தின் சிஇஓ சுட்டுக்கொலை!
நியூயார்கில் பிரபல காப்பீட்டு நிறுவனத்தின் சிஇஓ சுட்டுக்கொலை செய்யப்பட்டதைப் பற்றி...
நியூயார்க்: அமெரிக்காவில் நிறுவன முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற யுனைடெட் ஹெல்த்கேரின் சிஇஓ பிரையன் தாம்சன் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தை சார்ந்த சர்வதேச நிறுவனம் யுனைடெட் ஹெல்த் குழுமத்தின் கிளை நிறுவனமான யுனைடெட் ஹெல்த் கேர் 4.90 கோடி அமெரிக்கர்கள் பயன்பெறும் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டு நிறுவனமாகும்.
இதன் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் பிரையன் தாம்சன் (வயது 50). இவர் புதன்கிழமை காலை 6.45 மணியளவில் மேன்ஹேட்டனிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் கூட்டத்தில் பங்கேற்று பேசுவதற்காக வந்தப் பொழுது, அவரை அந்த ஹோட்டலின் வெளியே அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினார்.
Advertisement
உடனே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அந்த மர்ம நபர் பிரையனை கொலைச் செய்ய திட்டமிட்டு அங்கு காத்திருந்ததும், பிரையன் அந்த ஹோட்டலுக்குள் நுழைய நடந்து சென்றப் பொழுது தான் வைத்திருந்த துப்பாக்கியால் அவரை பலமுறை சுட்டுவிட்டு தப்பியோடியதும் நியூயார்க் நகர போலீஸார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையும் படிக்க: வங்கதேச சிறைகளிலிருந்து தப்பிய 700 கைதிகள் தலைமறைவு!
கடந்த 2004 ஆம் ஆண்டு அந்நிறுவனத்தில் இணைந்த பிரையன் தாம்சன், 2021ஆம் ஆண்டு முதல் யுனைடெட் ஹெல்த் கேரின் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றி வந்தார். 50 வயதாகும் பிரையனுக்கு மனைவியும் இரு மகன்களும் உள்ளனர்.
அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொலையாளியை தேடி வரும் நியூயார்க் நகர போலீஸார், கொலையாளி குறித்து தகவல் தருபவர்களுக்கு 10,000 அமெரிக்க டாலர்கள் சன்மானமாக வழஙப்படும் என்று அறிவித்துள்ளனர்.