தொழிலதிபர் சுட்டுக்கொலை தில்லியில் பயங்கரம்
தில்லியில் இன்று காலை நடைபயிற்சியின் போது தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்டது பற்றி...
புதுதில்லி: கிழக்கு தில்லியின் ஷாதரா பகுதியில் இன்று காலை நடைபயிற்சியின்போது தொழிலதிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
புதுதில்லியின் கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் சுனில் ஜெயின். 52 வயதான இவர் சமையல் பாத்திரங்கள் சார்ந்த தொழிலை நடத்தி வந்துள்ளார்.
இன்று காலை அவர் நடைபயிற்சியை முடித்துவிட்டு ஃபர்ஷ் பஜாரின் அருகே தனது ஸ்கூட்டரில் வந்துக்கொண்டிருந்தார். அப்பொழுது, இருச்சக்கர வாகனத்தில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுனிலை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடினர். இதில், சம்பவ இடத்திலேயே சுனில் பரிதாபமாக உயிரிழந்தார்.
Advertisement
Advertisement
சுனில் உயிரிழந்த சம்பவம் குறித்து ஷாதரா துணைக் காவல் ஆணையர் பிரஷாந்த் கவுதம் கூறுகையில், “இன்று காலை 8.36 மணியளவில் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் வந்ததாகவும், சுனில் அந்த மர்ம நபர்களால் தொடர்ந்து 3-4 முறை சுடப்பட்டு கொல்லப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், அவரது குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் சுனிலுக்கு யாரிடமும் எந்தவொரு முன்விரோதமும் இல்லை என்றும் இதுக்குறித்து வழக்குப் பதிவு செய்து துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற அந்த மர்ம நபர்களை கண்டுப்பிடிக்க அப்பகுதியிலுள்ள சிசிடிவிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.