வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கவிட்டால் பாமக சார்பில் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை ராமதாஸ் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில் தெரிவித்ததாவது:
மத்திய அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கமுடியும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வன்னியர்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியில் உள்ள திமுக, இட ஒதுக்கீடு மூலம் வன்னியர்கள் பிரதிநிதித்துவம் பெறுவதை விரும்பவில்லை. இதற்கு திமுக சொல்லும் காரணமும் சரியானதாக இல்லை.
கல்வி, வேலைவாய்ப்பில் பின் தங்கிய நிலையில் உள்ளதை புள்ளிவிவரங்களின் மூலம் இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று உச்சநீதிமன்றமும் கூறியுள்ளது.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கமுடியாது என்று திமுக கூறியதை பாமக, வன்னியர் சங்கம் ஏற்காது. இதற்காக நான் மாபெறும் போராட்டங்களை நடத்தியுள்ளேன். தற்போது வன்னியர் உள் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி மாபெரும் போராட்டம் விரைவில் அறிவிக்கப்படும்.
10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால் வன்னியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அமைச்சர் சிவசங்கர் உண்மைக்கு மாறான தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
சாதிவாரி கணகெடுப்பை மாநில அரசு நடத்தமுடியாது என்று முதல்வர் கூறியுள்ளார். ஆனால் 2008 ஆம் ஆண்டு புள்ளிவிவர கணக்கெடுப்பின்படி எந்த ஒரு மாநில, யூனியன் பிரதேசமோ முழுமையான விவரங்களை திரட்ட முடியும் என கூறப்பட்டுள்ளது. பிகார், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் எடுக்கப்பட்டுள்ள சாதிவாரி கணக்கெடுப்புகள் செல்லும் என நீதிமன்றம் கூறியுள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில் பொய்யான காரணங்கள் கூறுபதை முதல்வர் தவிர்க்கவேண்டும். முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் சிவசங்கர் ஆகியோர் மீது உரிமை மீறல் பிரச்னையை பாமக எம்எல்ஏக்கள் கொண்டுவருவார்கள்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகிறேன். இது குறித்து பாமக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
இதில் நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம். மது தொடர்பான அனைத்து தீமைகளுக்கும் திமுகதான் காரணம். சாராயத்தை அறியாமல் இருந்த தலைமுறைக்கு 1972 - ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது திமுகதான்.
எனவே முழு மதுவிலக்கை தமிழக அரசு அமல்படுத்தவேண்டும். நெல்லுக்கு தமிழக அரசு வழங்கும் ஊக்கத்தொகை குறைவு. குவிண்டால் ஒன்றுக்கு ரூ 800 உயர்த்திதர வேண்டும். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாலாற்றின் குறுக்கே எத்தனை அணைகள் வேண்டுமானாலும் கட்டலாம் என்று கூறியது இரு மாநில உறவுகளை கெடுக்கிறது.
22 அணைகள் கட்டியபின்பு இனி அணை கட்டினால் பாலாறு பாலைவனமாகும். இதனை தடுக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு பேச வாய்ப்பு கொடுப்பதில்லை. இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. சட்டப்பேரவை 100 நாள்கள் நடத்த வேண்டும். சட்டப்பேரவை நிகழ்வுகளை அடுத்த கூட்டத்திலாவது நேரடி ஒளிப்பரப்பு செய்ய தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார அவர்.
இந்நிகழ்வின்போது பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், விழுப்புரம் கிழக்கு மாவட்டச் செயலர் ஜெயராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.