ஆந்திராவில் மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் திங்கள்கிழமை (மே 13) நடைபெறவுள்ள நிலையில், முன் அனுமதியின்றி ஒய்.எஸ்.ஆர்.சி கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் அல்லு அர்ஜூன் கடந்த சனிக்கிழமை (மே 11), அவரது நண்பரும் ஒய்.எஸ்.ஆர்.சி கட்சியின் வேட்பாளரும், நந்தியால் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சில்பா ரவிச்சந்திர கிஷோர் ரெட்டியை நந்தியால் நகர தேர்தல் பொதுக்கூட்டத்தில் சந்தித்து, அவருக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார். அங்கு அளவுக்கு மீறிய ரசிகர்கள் கூட்டம் அல்லு அர்ஜுனைக் காண வந்திருந்தனர்.
கடந்த 5 வருடங்களில், சட்டப்பேரவை உறுப்பினராக இருந்து நகரத்தை நன்றாக மேம்படுத்தியதாக சில்பா ரவிச்சந்திர கிஷோர் ரெட்டியை பாராட்டிய அல்லு அர்ஜுன், அங்கு வந்திருந்த கூட்டத்திற்கு நன்றி தெரிவித்தார். மேலும், தன்னுடைய அன்பும் ஆதரவும் எப்போதும் தனது நண்பர் கிஷோர் ரெட்டிக்கு இருக்கும் என்றும் கூறினார். இதனை, அல்லு அர்ஜுன் தனது எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளார்.
முன் அனுமதியின்றி அல்லு அர்ஜுன் தேர்தல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டதற்காக, தேர்தல் விதிகளை மீறியதாக கிஷோர் ரெட்டி மீதும், அல்லு அர்ஜுன் மீதும் நந்தியால் தொகுதியின் தேர்தல் மேற்பர்வையாளர் ராமச்சந்திர ராவ் சார்பில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய அல்லு அர்ஜுன், “என் நண்பர்களுக்கு உதவி தேவைப்படும்போது, அவர்கள் எந்தத் துறையில் இருந்தாலும் உதவ நான் தயாராக இருப்பேன். நான் இங்கு என் விருப்பத்தின் பேரிலேயே வந்தேன். அதனால், எந்தக் கட்சிக்கும் நான் ஆதரவு தருவதாக ஆகிவிடாது” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.