கேரள மாவட்டம், மலப்புரத்தில் அரிய வகையிலான அமீபிக் தொற்று மூலம் 5 வயது சிறுமி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்த சிறுமியின் உடலில் ‘மூளையை உண்ணும் அமீபா’ எனப்படும் 'நாகிலேரியா ஃபோலேரி’ (Naegleria fowleri) அமீபா இருந்துள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
அசுத்தமான நீரில் காணப்படும் இந்த வகை அமீபா, ஒட்டுண்ணி வகையைச் சாராதது. இவை மூக்கு வழியாக உடலுக்குள் நுழைந்து மூளையை அடைந்து மூளைத்திசுக்களை அழிப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மலப்புரத்தில் மூன்னியூர் பகுதியில் வசித்து வந்த சிறுமி கடந்த மே.1 அன்று வீட்டின் அருகிலிருந்த குளத்தில் குளித்துள்ளார். பின்னர், மே. 10 முதல் காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் வெண்டிலேட்டரில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த சிறுமியின் உடலுக்குக் கொடுக்கப்பட்ட எந்த மருந்தும் பலனளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு வாரத்திற்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த சிறுமி, நேற்று (மே.20) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இறந்த சிறுமியுடன் சேர்ந்து குளத்தில் குளித்த மற்ற குழந்தைகளும் மருத்துவமனையில் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அவர்களுக்கு தொற்று பாதிப்பு இல்லாததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு முன்னதாக இந்த வகைத் தொற்று மூலம் ஆலப்புழா மாவட்டத்தில் கடந்த 2017, 2023 ஆண்டுகளில் சிலர் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.