ஓடும் காரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால், காரை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டுநர் மற்றும் உரிமையாளர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
திருப்பூர் மாவட்டம், காரணம்பேட்டை சேர்ந்தவர் துளசிமணி, இவர் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், துளசிமணி தன்னுடைய சொந்த வேலை காரணமாக கோவை சென்று விட்டு, அவிநாசி சாலை வழியாக காரணம்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
காரை ஓட்டுநர் நவீன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். சூலூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந்தபோது கார் இன்ஜினிலிருந்து திடீரென புகை கிளம்பியதுடன், தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதையும் படிக்க: சரக்கு லாரி - கார் மோதி விபத்து: 6 பேர் பலி!
இதனை கவனித்த ஓட்டுநர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு காரை சாலையோரம் நிறுத்தினார். உடனடியாக காரில் பயணித்த இருவரும் வெளியேறி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.
இஞ்சினில் பற்றிய தீ கார் முழுவதும் மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்த சம்பவத்தால், கோவை - அவிநாசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.