முகப்பு
தற்போதைய செய்திகள்

கவரப்பேட்டை ரயில் விபத்து: விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து..

Updated On : 17 அக்டோபர், 2024 at 7:11 AM
கவரப்பேட்டை ரயில் விபத்து
பகிர்:

கவரப்பேட்டையில் ஏற்பட்ட ரயில் விபத்துக்கு நட்டு, போல்ட் கழற்றப்பட்டதே காரணம் என காவல் துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் கடந்த அக். 11-ஆம் தேதி இரவு சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பயணிகள் காயமடைந்த நிலையில், உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இவ்விபத்து குறித்து பாக்மதி விரைவு ரயிலின் லோகோ பைலட், துணை லோகோ பைலட், ரயில் பாதுகாவலா்(காா்டு), பயணச்சீட்டு பரிசோதகா், ஏசி பெட்டி பணியாளா்கள் மற்றும் பேன்ட்ரி அலுவலர்கள், பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை ரயில் நிலைய அதிகாரி, பொன்னேரி மற்றும் விபத்து நடந்த பகுதியின் சிக்னல் பொறுப்பு அலுவலா் உள்ளிட்ட 13 பிரிவுகளைச் சோ்ந்த 30 ரயில்வே அலுவலா்கள் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெற்கு ரயில்வே பாதுகாப்புத் துறை சாா்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

சென்னை சென்ட்ரலில் உள்ள சென்னை ரயில்வே கோட்ட தலைமை அலுவலகத்தில் தென்மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி தலைமையில் புதன்கிழமை விசாரணை நடந்தது. முதல்கட்டமாக 15 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில், கவரப்பேட்டை ரயில் விபத்துக்கு தொழில்நுட்பக் கோளாறு காரணமில்லை எனவும், நட்டு, போல்ட் கழற்றப்பட்டதே காரணம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், விபத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் பாக்மதி விரைவு ரயில் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் நாளாக இன்றும்(அக். 17) மீதமுள்ள 15 பேரிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.