முகப்பு
தற்போதைய செய்திகள்

பென்னாகரம் பேருந்து நிலைய நுழைவு வாயிலுக்கு நிதி ஒதுக்கியது திமுக வா?, பாமக வா? - பாமகவினர் தர்ணா

பென்னாகரம் புதிய பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் அமைப்பதற்கு நிதி ஒதுக்கியது பாமகவா?, திமுகவா? என இரு தரப்பினரும் மாறி மாறி வாக்குவாதம்

Updated On : 22 செப்டம்பர், 2024 at 6:03 AM
பேருந்து நிலையத்திற்கான நுழைவு வாயில் அமைக்கும் பூமி பூஜையின் போது தகராறில் ஈடுபடும் திமுக, பாமகவினர்
பகிர்:

பென்னாகரம்: பென்னாகரம் புதிய பேருந்து நிலையத்தின் நுழைவு வாயில் அமைப்பதற்கு நிதி ஒதுக்கியது பாமகவா?, திமுகவா? என இரு தரப்பினரும் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு நுழைவு வாயில் அமைப்பதற்கான பூமி பூஜையை தடுத்து பாமகவினர் தர்ணாவில் ஈடுபட்டு வருவதால் பேருந்து நிலையம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம்,பென்னாகரம் பகுதிக்கென கடந்த 2019 ஆம் ஆண்டு மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.4.50 கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீடு செய்து புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்று 80 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில் கூடுதலாக தரைத்தளம் உள்ளிட்ட இதர பணிகளுக்காக பேரூராட்சிகளின் பொது நிதியிலிருந்து ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் பாமக திமுகவினரிடையே ஏற்பட்ட தகராறு அந்தப் பகுதியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல்.

இந்த நிலையில், புதிய பேருந்து நிலையத்திற்கு நுழைவு வாயில் அமைப்பதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்தது. நுழைவு வாயில் அமைப்பதற்கு திமுக தருமபுரி மக்களவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.39 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து விவசாயிகள்,தொழிலாளர்கள் அணி துணை தலைவர் பி.என்.பி. இன்பசேகரன் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் பூமி பூஜை செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்த போது, பாமகவினர் பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஜி.கே.மணி ரூ.39 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், பூமி பூஜைக்கு முறையான அழைப்பு விடுக்காமல் நுழைவு வாயில் அமைப்பதற்கான பணியினை திமுக மறைமுகமாக செய்வதாக தெரிவித்து தருமபுரி மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமையிலான 20-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பூமி பூஜை அமைக்கப்பட உள்ள இடத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

Advertisement

இதனால் இரு தரப்பினருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பாமக பிரமுகர்கள் பேருந்து நிலையத்தில் நுழைவு வாயிலின் முன்பு நிறுத்தினர். நீண்ட நேரமாக இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்ட போது பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்த திமுக நிர்வாகிகளின் காரை பாமகவினர் தடுத்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயற்சித்ததாக தெரிகிறது. இதனால் பென்னாகரம் பேருந்து நிலையம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் பரபரப்பும் நிலவியது.

பென்னாகரம் பேருந்து நிலையத்தின் முன்பு வாகனங்களை நிறுத்தி உள்ள பாமகவினர்.

வாக்குவாதத்தில் ஈடுபட்ட திமுக, பாமகவினரை ஒரு மணி நேரத்திற்கு மேலாக காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினர் பூமி பூஜை நிகழ்வை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்தனர். இதையடுத்து திமுகவினர் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இருப்பினும் பாமக தரப்பினர் தொடர்ந்து காவல்துறையினர் இடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments