முகப்பு
தற்போதைய செய்திகள்

தை அமாவாசை: நெல்லை தாமிரவருணி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

தை அமாவாசையை முன்னிட்டு திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் புனித நீராடி புதன்கிழமை மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

Updated On : 29 ஜனவரி, 2025 at 4:29 AM
தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதற்காக புதன்கிழமை திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் புனித நீராடிய மக்கள்.
பகிர்:

திருநெல்வேலி: தை அமாவாசையை முன்னிட்டு திருநெல்வேலி தாமிரவருணி ஆற்றில் புனித நீராடி புதன்கிழமை மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

தாமிரவருணி ஆற்றில் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்ட மக்கள்.

முன்னோர்களுக்கு அமாவாசை நாள்களில் ஆற்றில் புனிதநீராடி தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்த அமாவாசை நாள்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க

இயலாதவர்கள், ஆடி, தை மாதங்களில் வரும் அமாவைசை நாள்களில் தர்ப்பணம் செய்வது நல்லது. அதில் ஆண்டு தோறும் வரும் ஆடி,தை மற்றும் மகாளய அமாவசைகள் மிகவும் பிரசித்திப் பெற்ற நாள்களாகும். இந்த நாள்களில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்து வழிபட்டால் பித்ரு தோஷம் நீங்கி வாழ்வில் நல்லன எல்லாம் நடக்கும் என்பது ஐதீகம்.

அதன்படி, தை அமாவாசை நாளான இன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக காலை முதல் நீர் நிலைகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது.

நெல்லை மாவட்டத்தில் பாய்ந்து ஓடும் புனித நதியான தாமிரவருணியில் அதிகாலையில் பொதுமக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். எள் தண்ணீர் உள்ளிட்டவைகளை ஆற்றில் கரைத்து தங்களது முன்னோர்களை வழிபட்டு வாழ்வில் அனைத்து நலன்களும் கிடைக்க வேண்டும் என வழிபட்டனா்.

திருநெல்வேலி பகுதியில் உள்ள குறுக்குத்துறை, குட்டத்துறை, பேராத்துச் செல்வி அம்மன் கோவில், அனந்த கிருஷ்ணாபுரம், செப்பரை, பாலாமடை, ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தாமிரவருணி படித்துறைகளில் பொதுமக்கள் புனித நீராடி, முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மக்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் வழிபட்டனர். பின்னர் பசுவுக்கு அகத்திக்கீரை வழங்கினர்.

திருநெல்வேலி சுற்றுவட்டார மக்கள் ஒரே நேரத்தில் திரண்டதால் கூட்டம் அலைமோதியது. மாநகராட்சி மற்றும் நகராட்சி சார்பாகவும் காவல்துறை சார்பாகவும் பல்வேறு பாதுகாப்பும் முன்னேற்பாடுகளை செய்து இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.