விழுப்புரம்: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் போராட்டம்
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் : விழுப்புரத்தில் வெள்ளிக்கிழை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் சி.பழனி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் கடந்த நவம்பர் 30,டிசம்பர் 1, 2, தேதிகளில் விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயல் பாதிப்பால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். விவசாய விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. எனவே எப்போது விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனக் கோரி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்.
இதற்கு அலுவலர்கள் பதில் அளித்தும், விவசாயிகள் முழக்கமிட்டனர்.
வடமாவட்டம் என்பதால் விவசாயிகளை அரசு வஞ்சிக்கிறதா என முழக்கமிட்டனர்.
அரசுக்கு சேத விவரங்கள் அனுப்பப்பட்டு, விரைவில் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அலுவலர்கள் தெரிவித்தனர். இதையடுத்து கூட்டம் நடைபெற்றது.