முகப்பு
தற்போதைய செய்திகள்

நலம்பெற்று வீடு திரும்பினேன்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பினார்.

Updated On : 27 ஜூலை, 2025 at 2:43 PM
சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
பகிர்:

சென்னை: கடந்த திங்கள்கிழமை (ஜூலை 21) உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மாலை வீடு திரும்பினார். இதனிடையே, நலம்பெற்று வீடு திரும்பினேன் என முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 21ஆம் தேதி நடைபயிற்சியில் ஈடுபட்டபோது, அவருக்கு திடீரென தலைசுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து, அவா் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவாறே முதல்வா் மு.க.ஸ்டாலின் அரசு பணிகளை மேற்கொண்டு வந்தாா். இதற்கிடையில், முதல்வருக்கு இதயத்துடிப்பில் சில வேறுபாடுகள் இருந்தது கண்டறியப்பட்டது. பின்னா், ஆஞ்சியோகிராம் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் அடிப்படையில், அடுத்த 3 நாள்கள் அவா் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவா்கள் அறிவுறுத்தியுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிா்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதனால் அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும் மருத்துவமனையில் இருந்தபடியே தொடர்ந்து கட்சி மற்றும் அலுவல் பணிகளை முதல்வர் மேற்கொண்டு வந்தார்.

இதனிடையே, கட்சி உடன்பிறப்புகள் களத்தில் ஓய்வின்றி களமாடிக் கொண்டிருக்கும் போது, மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் எனக்கு மருத்துவமனையில் ஓய்வெடுக்க மனமில்லை!

உயிராக நம்மை இயக்கும் கட்சியின் களச்செயல்பாடுகள் குறித்து மண்டலப் பொறுப்பாளர்களிடம் ஆலோசித்தபோது, உறுப்பினர் சேர்க்கையில் 150 தொகுதிகளில் நம் இலக்கை எட்டிய இன்பச் செய்தியை அவர்கள் பகிர, ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு குறித்த ஆலோசனைகளை வழங்கி உற்சாகம் பெற்றேன்! என எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், கிரீம்ஸ் சாலை அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர் செங்குட்டுவேல் தலைமையிலான மருத்துவ வல்லநர் குழு அளித்த சிகிச்சை முடிந்து முழுமையாக குணமடைந்த முதல்வர் ஞாயிற்றுக்கிழமை மாலை(ஜூலை 27) வீடு திரும்ப உள்ளார். முதல்வர் நலமாக இருக்கிறார். மூன்று நாள்கள் இடைவெளிக்குப் பின் வழக்கமான பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை 7 மணியளவில் வீடு திருப்பினார்.

மருத்துவனையில் இருந்து வீடும் திரும்பும் முதல்வரை காண வந்திருந்த கட்சியினர் மற்றும் மக்கள் கூட்டம்.
சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து மகிழ்ச்சியோடு வீடு திரும்பும் முதல்வர் ஸ்டாலின்

நலம்பெற்று வீடு திரும்பினேன்

இதனிடையே, நலம்பெற்று வீடு திரும்பினேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அக்கறையுடன் விசாரித்து, நலம் பெற வாழ்த்திய அனைத்து அரசியல் இயக்கத் தலைவர்கள் - மக்கள் பிரதிநிதிகள் - நீதியரசர்கள் - அரசு அதிகாரிகள் - திரைக் கலைஞர்கள் - என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகள் உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!

மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையளித்து, நான் விரைந்து நலம்பெற உறுதுணையாய் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் மீண்டும் அன்பும், நன்றியும்!

உங்களுக்காக உழைப்பை வழங்கும் என் கடமையை என்றும் தொடர்வேன்! என எக்ஸ் பக்கத்தில் கூறிப்பிட்டுள்ளார்.

summary

Chief Minister MK Stalin, who was admitted to Apollo Hospital in Chennai due to ill health and was undergoing treatment, returned home on Sunday evening after completing his treatment.

முழு கட்டுரையைப் படிக்க →