வளவனூர் அருகே சிறுத்தை புலி நடமாட்டம்!
விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே சிறுத்தை புலி நடமாட்டம் தொடர்பாக...
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வளவனூர் அருகே சிறுத்தை புலி நடமாட்டம இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகிலுள்ள சகாதேவன் பேட்டை முருகன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சீ. சிவராஜ் (71), இவர் தமிழ்நாடு வனத் தோட்டக் கழகத்தில் 37 ஆண்டுகளாக ஓட்டுநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
வெள்ளிக்கிழமை காலை விட்டின் சமையலறையில் இருந்த போது, ஜன்னல் வழியாக வீட்டுக்கு அருகிலுள்ள காலி மனை வழியாக சிறுத்தை புலி நடந்து சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து வீட்டின் மேல் தளத்திற்கு சென்று பார்ப்பதற்குள் சிறுத்தை புலி கடந்து சென்றுவிட்டது.
இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சகாதேவன் பேட்டைக்கு சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் சிறுத்தை புலியின் கால் தடம் ஏதும் பதிவாகியுள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சிறுத்தை அருகிலுள்ள வளவனூர் ஏரியில் கருவேல மரக் காட்டுக்குள் சென்று இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
சிறுத்தை புலிக்கு 3 வயது இருக்கலாம் எனத் தெரிகிறது. இரண்டரை அடி உயரம் முதல் 3 அடி உயரமும், 3 முதல் 4 அடி நீளமும் இருக்கும். சாம்பல் நிறத்தில் கருப்புப் புள்ளிகள் கொண்டதாக சிறுத்தை இருந்ததாக சிறுத்தை புலியை நேரில் பார்த்த சிவராஜ் தெரிவித்தார்.