கம்பத்தில் சிறுத்தை நடமாட்டமா? பொதுமக்கள் அச்சம்!
கம்பத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறி அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
உத்தமபாளையம்: தேனி மாவட்டம் கம்பத்தில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறி அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.
கம்பம் அடுத்த மணிக்கட்டி ஆலமரம் பகுதியில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலத்தில் வினித் என்பவர் கால்நடை வளர்த்து வருகிறார். இதில் வெள்ளிக்கிழமை காலை 20 கிலோ ஆடு ஒன்று உடல் பாகங்கள் சிதறிய நிலையில் இறந்து கிடந்துள்ளது.
இதையடுத்து, அந்த ஆட்டை சிறுத்தை தாக்கி இருக்கலாம் என பொதுமக்களும் , விவசாயிகளும் வனத்துறையிடம் தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக கம்பம் மேற்கு வனச்சரகர் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று ஆட்டை தாக்கியது சிறுத்தையா வேறு ஏதேனும் மிருகமா என கால் தடங்கல் மற்றும் பிற தடயங்களை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதே பகுதியில், சில மாதங்களுக்கு முன் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை வனத்துறையினர் ட்ரோன் காட்சிகள் மூலமாக சோதனை செய்தனர். ஆனால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி விட்டது குறிப்பிடத்தக்கது.