முகப்பு
தற்போதைய செய்திகள்

வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?

மகாராஷ்டிரத்தில் பாராமதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வாபஸ்...

Updated On : 9 ஏப்ரல் 2026, 3:42 pm IST
சுநேத்ரா பவார் - IANS
பகிர்:

மகாராஷ்டிரத்தில் மறைந்த அஜீத் பவாரின் மனைவி சுநேத்ரா பவாருக்கு ஆதரவாக, பாராமதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஆகாஷ் மோர், தனது வேட்புமனுவை இன்று(ஏப். 9) வாபஸ் பெற்றுள்ளார்.

மகாராஷ்டிர துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவார், அண்மையில் நிகழ்ந்த விமான விபத்தில் பலியானார். அஜீத் பவாரின் மறைவைத் தொடா்ந்து, அவா் வகித்து வந்த துணை முதல்வா் பதவியை அவரது மனைவியான சுநேத்ரா பவார் ஏற்றார்.

பின்னர் சுநேத்ரா, தான் வகித்துவந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா். அஜீத் பவார் மறைவால் பாராமதி தொகுதிக்கு வருகிற ஏப்ரல் 23 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸின்(அஜீத் பவார் தரப்பு) சுநேத்ரா பவார் போட்டியிடுகிறார். காங்கிரஸ் சார்பில் ஆகாஷ் மோர் என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.

Advertisement

Advertisement

அஜீத் பவாருக்கு மரியாதை அளிக்கும் விதமாகவும் சுநேத்ரா பவாருக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் தனது வேட்பாளரைத் திரும்பப் பெற வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வந்தது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், எம்.பி. சுப்ரியா சுலேவும் இன்று வலியுறுத்தினர்.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸும் மகாராஷ்டிர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஹர்ஷவர்தன் சப்கலுடன் பேசியதாகத் தெரிகிறது.

இதையடுத்து காங்கிரஸ் வேட்பாளர் ஆகாஷ் மோர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுள்ளார்.

சுநேத்ரா பவாருக்கு எதிரான காங்கிரஸ் வேட்பாளரை வாபஸ் பெற்றுவிட்டோம் என்றும் அதேநேரத்தில் பாஜகவுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றும் ஹர்ஷவர்தன் சப்கல் தெரிவித்தார். அதேநேரத்தில் பாஜகவுடன் அஜீத் பவாரின் கட்சி கூட்டணி வைத்துள்ளதையும் அவர் விமர்சித்துள்ளார். சுநேத்ரா பவார், இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையும் சந்தித்துப் பேசியதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏப். 23 ஆம் தேதி பாராமதி தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இப்போது பாராமதி தொகுதியில் பிரதான கட்சி சார்பில் சுநேத்ரா பவார் மட்டும் போட்டியிடும் நிலையில் அவருக்கு எதிராக சுயேச்சைகள் 28 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும் பாராமதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆகாஷ் மோர் உள்பட 33 பேர் தங்கள் வேட்புமனுவை திரும்பப் பெற்றுள்ளனர். 6 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

கட்சி அல்லாது சுயேச்சைகள் மட்டுமே போட்டியிடுவதால் சுநேத்ரா பவார் வெற்றி பெறவே வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

summary

Congress Withdraws Candidate in Baramati Bypoll, Sunetra Pawar Set for Clear Run

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.