சுநேத்ரா பவாருக்கு எதிரான காங். வேட்பாளரைத் திரும்பப் பெற வேண்டும்! என்சிபி வலியுறுத்தல்
பாராமதி தொகுதியில் வேட்பாளரைத் திரும்பப் பெற காங்கிரஸுக்கு தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தல்...
மகாராஷ்டிர மாநிலம் பாராமதி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரைத் திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சரத் பவார், எம்.பி. சுப்ரியா சுலே ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் பாராமதியில் அண்மையில் நிகழ்ந்த விமான விபத்தில் துணை முதல்வரும் தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜீத் பவாா் பலியானார். அஜீத் பவாரின் மறைவைத் தொடா்ந்து, அவா் வகித்து வந்த துணை முதல்வா் பதவியை அவரது மனைவியான சுநேத்ரா பவார் ஏற்றாா்.
பிறகு தான் வகித்துவந்த மாநிலங்களவை எம்.பி. பதவியை அவர் ராஜிநாமா செய்தாா். இதனிடையே அஜீத் பவார் மற்றும் பாஜக எம்எல்ஏ சிவாஜி கார்டிலே ஆகியோரின் மறைவால் காலியான, புணேவின் பாராமதி மற்றும் அகிலயநகரின் ரஹுரி ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் துணை முதல்வர் சுநேத்ரா பவார் பாராமதி தொகுதியில் போட்டியிடுகிறார்.
Advertisement
இந்நிலையில் பாராமதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஆகாஷ் மோர் என்பவர் போட்டியிடுகிறார்.
சுநேத்ரா பவாருக்கு ஆதரவாக காங்கிரஸ் தனது வேட்பாளரைத் திரும்பப் பெற வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் பாராமதி தொகுதி எம்.பி. சுப்ரியா சுலேவும் இதனை வலியுறுத்தியுள்ளார்.
அஜித் பவாருக்கு மரியாதை செலுத்தும்பொருட்டு சுநேத்ரா பவாருக்கு ஆதரவாக காங்கிரஸ் தனது வேட்பாளரை வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளார். அஜித் பவார் காங்கிரஸ் கட்சியில் இருந்துதான் தனது அரசியல் பயணத்தையும் தொடங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதேபோல தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் காங்கிரஸுக்கு இதனை வலியுறுத்தியுள்ளார்.
ஏப். 23 ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் பாராமதி தொகுதிக்கான வேட்புமனு வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும்.