முகப்பு
அழகிய இல்லம்

குழம்பு சுவைக்க.. மணக்க! அற்புதமான யோசனைகள்!!

குழம்பு சுவைக்கவும் மணக்கவும் அற்புதமான யோசனைகள்

Updated On : 12 ஜனவரி, 2026 at 12:03 PM
குழம்பு
பகிர்:

எத்தனை கவனமாக வைத்தாலும் குழம்பு அம்மா வைப்பது போல இல்லை என்று கவலைப்படும் சமையல் அறைக்குள் புதிதாக நுழைந்திருப்பவர்களுக்கு சில எளிய டிப்ஸ்.

மோர்க்குழம்புக்கு அரைக்கும்போது பச்சை மிளகாயை சிறிது எண்ணெய்யில் வதக்கிவிட்டு அரைத்தால் பச்சை நிறமாக மாறாமல் மோர்க்குழம்பு வெண்மையாக இருக்கும். அரைக்கவும் எளிது.

பாகற்காய் குழம்பு வைக்கும் போது சுவை பிடிக்காதவர்கள், ஒரு கேரட்டையும் சேர்த்து வைத்தால் பாகற்காய் குழம்பில் கசப்பு தெரியாது.

சுவையான சாம்பார் வைக்கும்போது நான்கு பச்சை வெங்காயத்தைக் கடைசியில் நைசாக அரைத்து சேர்த்துவிட்டு இறக்கினால் சாம்பார் பிரமாதமாக மணக்கும்.

குழம்பு செய்து கீழே இறக்கும்போது தனியா, கடலைப்பருப்பு, நிலக்கடலை, கொப்பரை, சிறிதளவு வெந்தயம், சிறிதளவு மிளகு இவைகளை அரைத்துப் பொடி செய்து குழம்பில் இந்தப் பொடியை ஒரு தேக்கரண்டி போட்டு ஒரு கொதி வந்து இறக்கினால் குழம்பு சூப்பராக இருக்கும்.

வெந்தயக் குழம்பு செய்யும்போது நல்லெண்ணெய்யில் தாளித்து அதிலேயே மிளகாய் பொடி காய்கறி இவைகளையும் வதக்கி பிறகு புளி, உப்பு சேர்த்து குழம்பு செய்தால் வாசனை பிரமாதமாக இருக்கும்.

வெந்தயத்தை சிவக்க வறுத்துப் பொடி செய்து வைத்துக் கொண்டு சாம்பார் செய்யும்போது கொதிக்கும் சாம்பாரில் அரை தேக்கரண்டி போட்டால் சாம்பார் கமகம என மணக்கும். எல்லோரும் உங்களிடம் டிப்ஸ் கேட்பார்கள்.

சாம்பார் வாசனையுடன் இருக்க கொதித்து இறக்கியவுடன் ஒரு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலைப் போட்டு மூடி வைக்க வேண்டும்.

வற்றல் குழம்பு கொதித்த பின்னர் நெல்லிக்காய் அளவு வெல்லம் சேர்த்தால் சுவையாக இருக்கும். சுவை பிடிப்பவர்கள் இவ்வாறு செய்யலாம்.

பருப்பு உருண்டைக் குழம்பில் பருப்பு உருண்டைகள் குழம்பில் கரையாமல் இருக்க பருப்பை அரைக்கும்போது ஒரு பிடி பச்சரிசியையும் சேர்த்து அரைத்து உருட்டிப் போட்டால் கரையாது. உருண்டையை கையில் அழுத்திப் பிடிக்கக் கூடாது.

காரக் குழம்பு செய்யும்போது இரண்டு தேக்கரண்டி கடலைப் பருப்பை வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு குழம்பு செய்தால் மணமாக இருக்கும்.

ஆர். ராமலட்சுமி

summary

Taste the gravy.. smell it! Amazing ideas!

முழு கட்டுரையைப் படிக்க →