அன்பான தினமணி வாசகர்களே!
உங்களில் எத்தனை பேருக்கு பழமொழிகளின் மீது ஆர்வம் இருக்கிறது? பழமொழி சொல்லியே சாகடிக்கும் அம்மாக்கள், பாட்டிகள் மற்றும் அத்தைகளினூடாக வாழ்ந்து வந்த சமுதாயம் நம்முடையது. நம் சமூகத்தில் ஆண்களும் கூட பழமொழிகள் சொல்லியதுண்டு. எல்லாம் கடந்த தலைமுறையினரோடு முடிந்து விட்டதோ எனும் படியாக இன்று தமிழ் பழமொழிகளை தங்களது பேச்சினூடே புழங்குவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. விட்டால் இன்னும் சில காலங்களில் பழமொழியா? அப்படின்னா என்ன? என்று கேட்போர் பெருகி விடுவார்கள் போலிருக்கிறது. எனவே தான் இப்படி ஒரு போட்டி வைத்தால் என்ன என்று தோன்றியது.
கீழே 10 பழமொழிகளைத் தந்திருக்கிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் . அந்தப் பழமொழிகளை வாசித்து அவற்றுக்கான அர்த்தத்தை எழுதி உங்களது பெயர், முகவரியை எழுதி உங்களது புகைப்படத்தையும் இணைந்து எங்களுக்கு அனுப்ப வேண்டியது தான்,
செய்வீர்களா?
பழந்தழிழ் பழமொழி இன்பம்...
1. பட்டும் பாழ், நட்டும் சாவி.
2. கொடுக்கிறது உழக்குப்பால், உதைக்கிறது பல்லுப்போக
3. கை காய்த்தால் கமுகு (பாக்கு) காய்க்கும்.
4. மேய்த்தால் கழுதை மேய்ப்பேன், இல்லாதேபோனால் பரதேசம் போவேன்.
5. முடி வைத்த தலைக்குச் சுழிக் குற்றம் பார்க்கிறதா?
6. பார்க்கக்கொடுத்த பணத்துக்கு வெள்ளிக்கிழமையா?
7. கெரடி கற்றவன் இடறிவிழுந்தால், அதுவும் ஒரு வரிசை என்பான்.
8. சங்கிலே விட்டால் தீர்த்தம், மொந்தையிலே விட்டால் தண்ணீர்.
9. வாழைப்பழம் கொண்டுபோனவள் வாசலில் இருந்தாள், வாயைக் கொண்டுபோனவள் நடுவீட்டில் இருந்தாள்.
10. நேற்று வெட்டின கிணற்றிலே முந்தாநாள் வந்த முதலை போல.
முழுமையாக 10 பழமொழிகளுக்கும் சிறப்புர தெளிவான அர்த்தங்களை எழுதி அனுப்பும் வாசகர்களின் பதில்கள் அவர்களது புகைப்படத்துடன் தினமணி.காமில் வெளியிடப்படும்.
தினமணி வாசகர்களில் எத்தனை பேருக்கு தமிழ் பழமொழிகளின் மேல் பற்று உண்டு என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன்
தினமணி இணையதளக்குழு.