முகப்பு
செய்திகள்

குடும்பத்தில் சண்டை ஏற்பட இதுதான் காரணம்! - ஆய்வு சொல்வது என்ன?

வீட்டில் சண்டை ஏற்படுவதற்கு பிள்ளைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதுதான் காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வு.

Updated On : 25 ஆகஸ்ட் 2022, 11:54 am IST
பகிர்:

வீட்டில் சண்டை ஏற்படுவதற்கு பிள்ளைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதுதான் காரணம் என்கிறது சமீபத்திய ஆய்வு.

குழந்தைகளும் ஸ்மார்ட்போனும் இன்று ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துவிட்டன. குழந்தைகளிடம் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்கள், இன்று அவர்கள் நாள்தோறும் பயன்படுத்தும் தேவை உருவாகிவிட்டது.

குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவதற்கு பறவைகளை காட்டியது பறந்துபோய், இன்று ஸ்மார்ட்போன்களில் வரும் கார்ட்டூன் விடியோக்களை காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

ஆன்லைன் கல்வியை ஒரு காரணமாக வைத்து சமூக வலைத்தளங்கள், விடியோ கேம் செயலிகள் என்று பழக்கப்படுத்திக்கொள்கின்றனர். குழந்தைகளின் அனைத்து செயல்பாடுகளிலும் ஸ்மார்ட்போன்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. 

ஒருகட்டத்தில் பெற்றோரால் இதனை கட்டுப்படுத்த முடியாத நிலையில் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது. 

குழந்தைகள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்களைப் பயன்படுத்துவதால்தான் பெரும்பாலான குடும்பங்களில் சண்டை ஏற்படுவதாக புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது. 

அதாவது வீட்டில் குழந்தைகள், பதின்ம வயது பிள்ளைகளுடனான சண்டைகளுக்குக் காரணம் அவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதுதான் என்கிறது இந்த ஆய்வு. 

மேலும், வருங்காலத்தில் குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டைக் குறைக்கவும் குழந்தைகளுக்கு பெற்றோர் வழிகாட்டுவதன் அவசியத்தையும் ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். 

ஆஸ்திரேலியாவில் உள்ள எடித் கோவன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டஆய்வு முடிவுகள் 'ஹ்யூமன் பிஹேவியர் அண்ட் எமர்ஜிங் டெக்னாலஜிஸ்' இதழில் வெளியிடப்பட்டுள்ளன.

281 ஆஸ்திரேலியப் பெற்றோர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 75 சதவீத பெற்றோர்கள், குழந்தைகள் மொபைலைப் பயன்படுத்துவதால் குடும்பத்தில் மோதல், பதற்றம், கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதாகக் கூறியுள்ளனர். 

குழந்தைகளின் மொபைல் பயன்பாட்டினால் உடற்பயிற்சி இல்லாதது, அவர்களின் பணிகளை முடிப்பதில் சிரமங்கள், அதிகம் கேமிங் விளையாடுதல், படிப்பில் கவனச் சிதறல், தூக்கத்தில் சிக்கல்கள், சமூக விலகல் ஆகியவை 5 இல் 1 பெற்றோர் கூறும் பொதுவான பிரச்னைகள். மேலும் குழந்தைகளின் இந்த விஷயங்களைக் கையாள்வது மிகவும் சிரமமாக இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். 

'இன்றைய பெற்றோர்கள், அவர்கள் காலத்தில் ஸ்மார்ட்போன் இல்லாததால் இன்றைய தலைமுறை குழந்தைகளை சமாளிக்கப் போராடுகிறார்கள்.  தகவல் தொடர்பு மற்றும் இதர பயன்பாட்டுக்காக ஸ்மார்ட்போன் வந்த நிலையில் இன்று அது பெரும் அச்சுறுத்தலாக மாறிவிட்டது. 

குழந்தைகள் டிஜிட்டல் மீடியாவை எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த வழிகாட்டுதல்களை கண்டிப்பாக தங்கள் குழந்தைகளுக்கு பெற்றோர் வழங்க வேண்டும். இதுகுறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது அவசியமானது' என்கிறார் ஆய்வாளர் ஸ்டெபனி மில்ஃபோர்டு. 

எனவே, குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க முடியாத இந்த சூழ்நிலையில் அவர்கள் நாள் ஒன்றுக்கு எவ்வளவு நேரம் பயன்படுத்த வேண்டும், எந்தெந்த தளங்களைப் பார்க்க வேண்டும், அதனால் அவர்களுக்கு என்ன பயன் இருக்கிறது என்று பகுத்தறிந்து தேவைக்கு மட்டும் பயன்படுத்த பெற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். அதிக ஸ்மார்ட்போன் பயன்பாட்டினால் ஏற்படும் விளைவுகளை அவ்வப்போது புரிய வைக்க வேண்டும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.