மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? இதைச் செய்தால் போதும்!
எந்நேரமும் மகிழ்ச்சியாக இல்லாவிட்டாலும் முடிந்தவரை மகிழ்ச்சியாக நிம்மதியாக இருக்க சில வழிகள்...
மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது இந்த உலகத்தில் ஒவ்வொருவரின் ஆசைதான். ஆனால், அதனை எப்படி பெறுவது என்பதில்தான் சிக்கல் இருக்கிறது.
வாழ்க்கை எந்த அளவுக்கு சாதாரணமானதோ அந்த அளவுக்கு சிக்கலானதும்கூட. நாம் எடுத்துக்கொள்ளும் விஷயங்களில்தான் அனைத்தும் இருக்கிறது.
தேவையற்ற விஷயங்களை மனதில் போட்டு குழப்பிக்கொள்ளும் பலரை பார்த்திருக்கலாம். ஏன் நாமும் அவர்களில் ஒருவராக இருக்கலாம். இப்படியானவர்கள் மகிழ்ச்சியாக இருக்க ஒருபோதும் முடியாது.
Advertisement
டேக் இட் ஈஸி என்று எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்பவர்களே ஓரளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
வாழ்க்கையில் இன்பம், துன்பம் இரண்டு உண்டுதான். எந்நேரமும் மகிழ்ச்சியாக இல்லாவிட்டாலும் முடிந்தவரை மகிழ்ச்சியாக நிம்மதியாக இருக்க சில வழிகள்...
'நோ' சொல்லுங்கள்
'நோ' சொல்வதற்கு இன்று பலரும் பயப்படுகிறோம். ஆனால், சில விஷயங்களுக்கு 'நோ' சொல்வதுதான் நல்லது. உங்களால் முடியாது என்று கருதும் விஷயங்களுக்கு கொஞ்சமும் யோசிக்காமல் நோ சொல்லிவிடுங்கள். எல்லாவற்றும் 'ஆம்' சொன்னால், அதனாலும் நீங்கள் மன உளைச்சலுக்கு ஆளாகலாம்.
மொபைல் போன்
ஒருவரின் அதிகமான நேரத்தை ஆக்ரமித்துக் கொண்டிருப்பது மொபைல்போன். தகவல் தொடர்புக்காக மட்டும் பயன்படுத்த வந்த மொபைல்போன்கள் 24 மணி நேரமும் பயன்படுத்துகிறோம்.
மேலும், அதிகப்படியான மொபைல் பயன்பாடு உங்களின் மற்ற மகிழ்ச்சியான செயல்பாடுகளைத் தடுப்பதுடன் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. எனவே, மொபைல் பயன்பாட்டை குறைத்துவிடுங்கள்.
பயணம்
வெளியே சென்று இயற்கையை ரசிப்பது பலருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய விஷயம். பசுமையான இடங்கள், பறவைகளின் ஒலி, அல்லது உங்களுக்குப் பிடித்த இடங்கள், உங்கள் மனதுக்கு அமைதி தரக்கூடிய இடங்களுக்குச் செல்லுங்கள்.
நாள் ஒன்றுக்கு ஒருமுறையாவது வீட்டைவிட்டு வெளியே செல்லுங்கள். இதற்காக நீங்கள் தொலைதூர பயணம் மேற்கொள்ளத் தேவையில்லை. மாறாக, தெருவில் சில நிமிடங்கள் நடந்தாலே போதுமானது.
உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்தால் மகிழ்ச்சி கிடைக்குமா? என்றால் ஆம் கிடைக்கும் என்பதே உண்மை. உடற்பயிற்சி உடலில் மகிழ்ச்சிக்கான எண்டோர்பின்கள் மற்றும் செரோடோனின் ஹார்மோன்களை சுரக்கச் செய்கின்றன .
உடற்பயிற்சியின் மூலம் உங்கள் உடலுக்கும் மனதிற்கும் இடையே உள்ள இடைவெளி குறைகிறது. நீங்கள் உடல் ரீதியாக எவ்வளவு நன்றாக உணர்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக நீங்கள் மனதளவிலும் நன்றாக உணர முடியும்.
மற்றவர்களுடன் பேசுங்கள்
நவீன காலத்தில் ஒருவரையொருவர் நேரில் சந்தித்துப் பேசுவது என்பது குறைந்துவிட்டது. இயந்திர வாழ்க்கை போன்ற நிலையே பெரும்பாலான நகரங்களில் காணப்படுகிறது. இதனால் பலரும் தனிமையை உணரலாம்.
எனவே, உங்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க எல்லோரிடமும் அன்பாகப் பேசுங்கள். உங்கள் நண்பர்களுடன் வெளியில் செல்லுங்கள். சாலையில் செல்லும்போது தினமும் ஒருவருடனாவது புதிதாகப் பேசுங்கள். இது சமூக அறிவை உங்களுக்கு பெற உதவும். சமூக அறிவு உங்களுக்கு ஒரு நம்பிக்கையை அளிக்கும்.
எல்லை இல்லை
இறுதியாக, மகிழ்ச்சிக்கு வரையறை இல்லை. கஷ்டத்தை எல்லாம் விலக்கிவிட்டு உங்களுக்குப் பிடித்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
மனதுக்கு எதிராக செயல்படும்போதுதான் பிரச்னை ஏற்படுகிறது. யாருக்காகவும் எதற்காகவும் உங்கள் மனதுக்கு எதிரான ஒரு விஷயத்தைச் செய்யாதீர்கள். மகிழ்ச்சிக்கு இதுவே போதுமானது