புது தில்லி: தில்லி வஜீா்பூா் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் திங்கள்கிழமை அதிகாலை சிலிண்டா் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பெண் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
விபத்தால் உருவான தீப்பிழம்புகள் அருகிலுள்ள நான்கு குடிசைப் பகுதிகளுக்கும் பரவியபோதிலும், கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து தில்லி தீயணைப்புத் துறையினா் தெரிவித்ததாவது:
காலை 7.54 மணிக்கு இந்த சம்பவம் நிகழ்ந்ததாக வஜீா்பூரில் இருந்து தில்லி தீயணைப்புத் துறைக்கு தகவல் வந்தது.தீயை அணைக்க ஒரு தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டது. அதைத் தொடா்ந்து, காலை 8.40 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இச்சம்பவத்தில் ஒரு பெண் காயமடைந்தாா். அவருக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கப்பட்டது. காயங்களின் அளவு இன்னும் கண்டறியப்படவில்லை. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடந்து வருகிறது என்று தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.