தஞ்சாவூர் அருகே காசவளநாடு வேங்கராயன்குடிகாட்டில் உள்ள ஸ்ரீவில்லாயி அம்மன் உள்ளிட்ட ஐந்து கோயில்களில் ஆகஸ்ட் 25ஆம் தேதி மகா குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.
வேங்கராயன்குடிகாட்டில் காவல் தெய்வமாகவும், ஆன்மிகத் தலமாகவும் விளங்கி வரும் ஸ்ரீவில்லாயி அம்மன், விநாயகர், மலையாளத்தம்மன், பைரவர், அங்காளபரமேஸ்வரி ஆகிய கோயில்களில் கடந்த 2002-ம் ஆண்டு திருப்பணிகள் செய்யப்பட்டு, குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இதையடுத்து, 17 ஆண்டுகள் கழித்து ஸ்ரீவில்லாயி அம்மன் கோயிலுக்குப் புதிதாக ராஜகோபுரமும், ஊரின் நுழைவுவாயிலில் தோரணவாயிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து கோயில்களின் திருப்பணிகள் நிறைவுற்றதைத் தொடர்ந்து, ஆக. 23-ம் தேதி காலை 8 மணிக்கு கணபதி ஹோமத்துடன் இவ்விழா தொடங்குகிறது.
தொடர்ந்து நான்கு கால யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்ட பிறகு, ஆக. 25ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பகல் 11 மணி வரை மகா குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.