ஆடி வெள்ளியையொட்டி திருச்சியில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. இன்று காலை முதல் திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்துச் சென்றனர்.
மற்ற மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமையை விட ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைக்குத் தனிச் சிறப்பு உண்டு. இந்த மாதத்தில் அம்மனுக்குக் கூழ் ஊற்றுதல், பால்குடம் எடுத்தல், முளைப்பாரி எடுத்தல், தீ மிதித்தல் என அனைத்து வைபவங்களும் மாதம் முழுவதுமே நடைபெறும்.
அந்தவகையில் இன்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை என்பதால் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிஷேகங்களும், அலங்காரமும் செய்யப்பட்டது. இன்று ஆடி முதல் வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு, அம்மனை வழிபட்டனர். வழக்கத்தைவிடப் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக் காணப்பட்டதால் அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.