திருப்பதி பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாளான இன்று தங்க பிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 27-ஆம் தேதி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கி, அக்டோபர் 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பிரம்மோற்சவத்தில் ஒவ்வொரு நாளும் மலையப்பசுவாமி வெவ்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவின் முக்கிய வாகன சேவையான கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது.
இந்நிலையில் ஏழாம் நாளான இன்று தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளி கிருஷ்ணர் அலங்காரத்தில் நான்கு மாட வீதியிலும் வலம் வந்து அருள்பாலித்து வருகிறார். இதைதொடர்ந்து இன்றிரவு சந்திர சபையில் மலையப்பசுவாமி எழுந்தருளுகிறார்.
நாளை தங்க குதிரை வாகனத்திலும், நாளை மறுநாள் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் விழா நிறைவடைகிறது.
பிரம்மோற்சவ திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு மலையப்பசுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.