இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு 8 வாரங்கள் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான பாட் கம்மின்ஸ் கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிந்து தொடர்ச்சியாக பல்வேறு தொடர்களில் விளையாடி வருகிறார். அமெரிக்காவில் நடைபெற்ற மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடி தாயகம் திரும்பியுள்ளார் பாட் கம்மின்ஸ்.
இந்த ஆண்டின் இறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறவில்லை.
தொடர்ச்சியாக 4 டெஸ்ட் தொடர்களில் இந்தியாவிடம் ஆஸ்திரேலிய அணி தோல்வியைத் தழுவியுள்ளது. இந்த முறை டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் ஆஸ்திரேலிய அணி தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் கருத்தில் கொண்டு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு 8 வாரங்கள் ஓய்வளிக்கப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது குறித்து பாட் கம்மின்ஸ் பேசியதாவது: சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு அணியில் மீண்டும் இணையும் அனைவரும் புத்துணர்ச்சியாக உணர்வார்கள். அதற்காக அவர்கள் வருத்தப்பட மாட்டார்கள். கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியிலிருந்து தொடர்ச்சியாக கிட்டத்தட்ட 18 மாதங்கள் அணிக்காக பந்துவீசி வருகிறேன். 7-8 வாரங்கள் ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் அணிக்கு திரும்புவது புத்துணர்ச்சியை கொடுக்கும் என்றார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் 22 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.