அபிஷேக் சர்மா vs இஷான் கிஷன்! ஹைதராபாத் அணியின் புதிய கேப்டன் யார்?
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிரதான கேப்டன் பாட் கம்மின்ஸ் இன்னும் உடற்தகுதி பெறாத நிலையில், புதிய கேப்டன் யார்? என்ற சந்தேகம் எழுந்துள்ளதைப் பற்றி...
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிரதான கேப்டன் பாட் கம்மின்ஸ் இன்னும் உடற்தகுதி பெறாத நிலையில், புதிய கேப்டன் யார்? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 19-வது தொடர் வருகிற 28 ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் திடலில் தொடங்குகிறது. கோலகலமாகத் தொடங்கும் இந்தத் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியும் முன்னாள் சாம்பியன் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் பத்து நாள்களே இருக்கும் நிலையில், அணிகள் ஒவ்வொன்றாக பயிற்சியை தொடங்க ஆரம்பித்துவிட்டன. வெளிநாட்டு வீரர்கள் தங்களது அணிகளுடன் இணைந்து பயிற்சியைத் தொடங்க தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் புதிய கேப்டனாக அதிரடி பேட்டரும், இந்திய அணிக்காக டி20 உலகக் கோப்பையை வென்ற அணியில் அங்கம் வகித்தவருமான அபிஷேக் சர்மா, கேப்டனாக நியமிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே நேரத்தில் மற்றொரு இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷனின் பெயரும் ஹைதராபாத் நிர்வாகம் தரப்பில் கூறப்படுகிறது.
ஐபிஎல்லில் அதிரடிக்குப் பெயர்போன ஹைதராபாத் அணி, கடந்த தொடரில் 5-க்கும் மேற்பட்ட போட்டிகளில் 250 ரன்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்தது. அந்த அணியின் பிரதான கேப்டன் பாட் கம்மின்ஸ், ஆஷஸ் தொடரின் போது காயமடைந்தார்.
அதன்பின்னர், நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான தொடர், டி20 உலகக்கோப்பைத் தொடரில் அவர் விளையாடவில்லை. காயத்திலிருந்து மீளாத நிலையில், அவர் ஐபிஎல் தொடரில் முதல் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இதனால், அவருக்குப் பதிலாக யார் புதிய கேப்டன் என்ற சந்தேகம் நிலவி வருகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் பாட் கம்மின்ஸ் ரூ. 20.50 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு, அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். கடந்த மூன்று சீசன்களாக சன்ரைசர்ஸ் அணியை பாட் கம்மின்ஸ் கேப்டனாக வழிநடத்தி வருகிறார்.
இந்த நெருக்கடி சூழலுக்கு மத்தியில், ஹைதராபாத் அணியை வழிநடத்த 27 வயதான இஷான் கிஷன் சரியான தேர்வாக இருப்பார் என ஹைதராபாத் அணி நிர்வாகம் கருதுவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்து முடிந்த சையத் முஷ்டாக் அலி கோப்பையில் ஜார்க்கண்ட் அணியை மிகச் சிறப்பாக வழிநடத்தி அந்த அணிக்கு முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார் கிஷன். மேலும், 517 ரன்கள் குவித்திருந்தார்.