முன்னாள் கிரிக்கெட் வீரரும் தேர்வுக்குழுத் தலைவருமான ஃபரூக்கி அகமது வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
வங்கதேசத்தில் நிலவும் அரசியல் மாற்றங்களால் பிசிபியின் தலைவர் பதவியில் இருந்து நஜ்முல் ஹாசன் பாபோன் ராஜிநாமா செய்தார்.
நேற்று நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் 58 வயதான ஃபரூக்கி அகமது புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
வங்கதேசத்தில் வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டில் அதிருப்தி அடைந்த மாணவர்களின் போராட்டம் அந்நாட்டில் அரசியல் மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதனால் பிசியின் தலைவராக இருந்த நஜ்முல் ஹாசன் பாபோன் தனது மனைவியோடு லண்டனுக்கு சென்றார்.
வங்கதேசம் நாடு முழுவதும் வன்முறை வெடித்ததால் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சித் தலைவர்கள், குடும்பத்தினர் என 29 பேர் கொலை செய்யப்பட்டனர். இதனால், ஷேக் ஹசீனா இந்தியாவில் அடைகலம் புகுந்தார்.
இளைஞா் புரட்சியை முறியடிக்க சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் விசாரணையை எதிா்கொள்ளும் வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என இந்தியாவிடம் அந்நாட்டின் பிரதான எதிா்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சி (பிஎன்பி) கோரிக்கை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நஜ்முல் ஹாசன் பாபோன் 2009 முதல் அவாமி லீக் கட்சியில் எம்பியாக இருந்துள்ளார். அவருடன் சேர்த்து மற்ற 16 துறை இயக்குநர்களும் ஆக.15இல் தாக்காவை விட்டு வெளியேறினார்கள்.
புதியதாக தேர்வாகியுள்ள ஃபரூக்கி அகமது இது குறித்து, “ நான் முன்னதாக தேர்வுக்குழு தலைவர் பதவியில் இருந்து ராஜிநாமா செய்தேன். முந்தைய அரசின் செயல்பாடுகளால் அதிருப்தியானதாலே ராஜிநாமா செய்தேன். தற்போது புதிய அரசுடன் கிரிக்கெட் வாரியத்தை எந்தப் பிரச்னைகளுமின்றி நடத்த முடியுமென நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
1988- 1999 வரை வங்கதேசத்துக்காக ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஃபரூக்கி அகமது விளையாடியுள்ளார். 2003- 2007, 2013- 2016 ஆகிய இரண்டு முறை தேர்வுக்குழுத் தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.