முகப்பு
கிரிக்கெட்

வாய்ப்பளித்த சூர்யகுமார் யாதவ்; நம்பிக்கையை காப்பாற்றிய திலக் வர்மா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய வீரர் திலக் வர்மா மூன்றாவது வீரராக களமிறங்கி சதமடித்தது தொடர்பாக...

Updated On : 14 நவம்பர் 2024, 5:44 pm IST
திலக் வர்மா - படம் | AP
பகிர்:

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய வீரர் திலக் வர்மா மூன்றாவது வீரராக களமிறங்கி சதமடித்து அசத்தினார்.

இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது டி20 நேற்று (நவம்பர் 13) நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. திலக் வர்மா சதம் விளாசி அசத்தினார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் 4-வது வீரராக களமிறங்கிய திலக் வர்மா 33 ரன்கள் மற்றும் 20 ரன்கள் எடுத்தார். நேற்றைய போட்டியில் 3-வது வீரராக களமிறங்கிய திலக் வர்மா சதம் விளாசி அசத்தினார். அவர் 56 பந்துகளில் 107 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

Advertisement

Advertisement

வாய்ப்பளித்த சூர்யகுமார் யாதவ்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின்போது, திலக் வர்மா தன்னிடம் 3-வது இடத்தில் களமிறங்க வாய்ப்பளிக்குமாறு கேட்டுக்கொண்டதாக சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சூர்யகுமார் யாதவ் - PTI

இது தொடர்பாக சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டியின்போது, திலக் வர்மா எனது அறைக்கு வந்து, 3-வது இடத்தில் களமிறங்க வாப்பளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அந்த இடத்தில் களமிறங்கி நான் சிறப்பாக விளையாட விரும்புகிறேன் எனக் கூறினார் என்றார்.

3-வது போட்டியில் சதம் விளாசிய திலக் வர்மா போட்டி நிறைவடைந்த பிறகு பேசியதாவது: நான் இன்று சிறப்பாக செயல்பட காரணம் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ். அவர் எனக்கு 3-வது வீரராக களமிறங்கும் வாய்ப்பினை அளித்தார். 3-வது இடத்தில் களமிறங்கி விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், கடந்த இரண்டு போட்டிகளிலும் நான் 4-வது வீரராக களமிறங்கி விளையாடினேன்.

3-வது டி20 போட்டிக்கு முன்னதாக சூர்யகுமார் யாதவ் எனது அறைக்கு வந்தார். நீங்கள் 3-வது வீரராக களமிறங்கி விளையாடுங்கள். இது உங்களுக்கு கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு. உங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் எனக் கூறினார். அதற்கு நான், நீங்கள் எனக்கு வாய்ப்பளித்துள்ளீர்கள். நான் எப்படி விளையாடுகிறேன் என்பதை போட்டியின்போது பாருங்கள் என பதிலளித்தேன் என்றார்.

சூர்யகுமாரிடம் கூறியது போலவே சிறப்பாக விளையாடி அவரது நம்பிக்கையை பெற்றுள்ளார் திலக் வர்மா. சிறப்பாக விளையாடி சதமடித்த திலக் வர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை (நவம்பர் 15) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.