டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கும், நியூசிலாந்து அணி 402 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இந்திய அணி தற்போது அதன் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
9000 ரன்களை கடந்த விராட் கோலி
போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் எடுத்துள்ளது. இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் விராட் கோலி 70 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் 9000 ரன்களைக் கடந்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 9 ஆயிரம் ரன்களைக் கடந்த 4-வது வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். அவருக்கு முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் (15,921 ரன்கள்), ராகுல் டிராவிட் (13,265 ரன்கள்) மற்றும் சுனில் கவாஸ்கர் (10,122 ரன்கள்) எடுத்து முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
அண்மையில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, சர்வதேச போட்டிகளில் அதிவேகமாக 27,000 ரன்களை நிறைவு செய்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்தார். அவர் 27 ஆயிரம் ரன்களை நிறைவு செய்ய வெறும் 594 இன்னிங்ஸ்கள் மட்டுமே எடுத்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.