மேத்யூஸின் கடைசி டெஸ்ட் போட்டிக்கு மரியாதை..! வங்கதேச வீரர்கள் இருவர் சதம்!
இலங்கை வீரர் மேத்யூஸின் கடைசி டெஸ்ட் போட்டி குறித்து...
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட்டில் ஓய்வுபெறவிருக்கும் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸின் கடைசி டெஸ்ட் போட்டிக்கு வீரர்கள் மரியாதை செலுத்தினர்.
இலங்கை காலே திடலில் நடைபெறும் இந்தப் போட்டியில் வங்கதேசம் முதல்நாள் முடிவில் 292 ரன்கள் குவித்துள்ளது. இதில் இருவர் சதமடித்து அசத்தியுள்ளார்கள்.
முஷ்ஃபிகுர் ரஹிம் 105*, நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ 136* ரன்களுடன் களத்தில் இருக்கிறார்கள்.
Advertisement
இந்தப் போட்டி தொடங்கும் முன்பு இலங்கை வீரர்கள் ஏஞ்சலோ மேத்யூஸுக்கு காட் ஆஃப் ஹானர் (ராணுவ மரியாதை) அளித்தார்கள்.
கடந்த 2009 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ஏஞ்சலோ மேத்யூஸ் இதுவரை இலங்கை அணிக்காக 118 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 8167 ரன்கள் குவித்துள்ளார்.
குமார் சங்ககாரா (12,400 ரன்கள்), மஹேலா ஜெயவர்த்தனேவுக்கு (11,814 ரன்கள்) அடுத்தபடியாக டெஸ்ட்டில் இலங்கை அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் மேத்யூஸ் உள்ளார்.
38 வயதாகும் மேத்யூஸ் டெஸ்ட் போட்டிகளில் சராசரி 44.62 ஆக உள்ளது. இலங்கை அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அவர் 16 சதங்கள் மற்றும் 45 அரைசதங்கள் எடுத்துள்ளார். 34 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார்.
சமீபத்திய நேர்காணலில், “எனது கேப்டன்சியில்தான் எனக்கு அதிகமாக முடிக் கொட்டியது. இலங்கை போன்ற ஒரு அணிக்கு கேப்டனாக இருப்பது கூடுதல் பொறுப்புடையது. சில நேரங்களில் அது வலி மிகுந்தது. ஆனால், நான் மகிழ்ச்சியாக இருந்தேன்” எனக் கூறினார்.