ஒருநாள் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறார் நியூசி. கேப்டன்!
ஓய்வு முடிவை அறிவித்தார் நியூசி. கேப்டன் சோஃபி டிவைன்.
இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் நியூசிலாந்து மகளிரணி கேப்டன் சோஃபி டிவைன் ஓய்வுபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
13-வது மகளிா் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 30 முதல் நவம்பா் 2 வரை இந்தியாவில் நடைபெறவுள்ளது. பாகிஸ்தான் விளையாடும் ஆட்டங்கள் மட்டும், இலங்கையின் கொழும்பு நகரில் நடைபெறவுள்ளன. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா நடத்தும் இந்தப் போட்டியில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற விரும்புவதாக நியூசிலாந்து மகளிரணி கேப்டன் சோஃபி டிவைன் அறிவித்திருக்கிறார்.
Advertisement
Advertisement
35 வயதான சோஃபி டிவைன் ஒருநாள் போட்டிகளில் மிகவும் பிரபலமான ஆல்ரவுண்டராகக் கருதப்படுகிறது. இதுவரை 152 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 3990 ரன்கள் குவித்தது மட்டுமின்றி, 107 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். மேலும், 8 சதங்களும் விளாசியிருக்கிறார்.
பேட்டிங்கில் மட்டுமின்றி, பந்துவீச்சிலும் அசத்தியுள்ள சோஃபி, 146 டி20 போட்டிகளில் விளையாடி 3431 ரன்களும், 119 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருக்கிறார்.
2006 ஆம் ஆண்டு தனது 16-வது வயதில் நியூசிலாந்து அணிக்கு அறிமுகமான சோஃபி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “விலகுவதற்கான சரியான நேரம் இதுவாக இருக்கும் என்று நினைக்கிறேன். நியூசிலாந்து அணியில் விளையாடியதைப் பெருமையானதாகக் கருதுகிறேன். அணிக்கு என்னுடைய பங்களிப்பை அளிப்பேன்” என்றார்.
2020 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணியின் நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்ட சோஃபி டிவைன், 2022 ஆம் ஆண்டில் அணியை வழிநடத்தி வென்றது மட்டுமின்றி, கடந்தாண்டு டி20 உலகக் கோப்பையையும் வென்றுகொடுத்தது குறிப்பிடத்தக்கது.