உலகத் தரத்திலான வீரராக உருவெடுக்கும் வருண் சக்கரவர்த்தி: முரளி விஜய்
வருண் சக்கரவர்த்தி உலகத் தரத்திலான வீரராக உருவெடுத்து வருவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.
வருண் சக்கரவர்த்தி உலகத் தரத்திலான வீரராக உருவெடுத்து வருவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. துபையில் நாளை மறுநாள் (மார்ச் 9) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. ஐசிசி சாம்பியன் பட்டத்தை வெல்ல இரண்டு அணிகளும் கடுமையான போட்டியாளர்களாக உள்ளனர்.
இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி அணிக்கு பலம் சேர்ப்பவராக உள்ளார். குரூப் ஸ்டேஜின் கடைசிப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி நியூசிலாந்துக்கு எதிராக களமிறக்கப்பட்டார். அந்தப் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய அவர் இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார்.
அதன் பின், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இரண்டு போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.
பாராட்டிய முரளி விஜய்
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், வருண் சக்கரவர்த்தி உலகத் தரத்திலான வீரராக உருவெடுத்து வருவதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் முரளி விஜய் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: வருண் சக்கரவர்த்தி உலகத் தரத்திலான வீரர் என நினைக்கிறேன். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவர் உலகத் தரத்திலான வீரராக உருவெடுத்து வருகிறார். ஏனெனில், கேரம் பந்துகளை இத்தனை கட்டுப்பாட்டுடன் அபாரமாக வீசுகிறார். அதனை பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது. இந்திய அணியில் அவருக்கு மிகவும் சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது என்றார்.