ஆசியக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியின் போது இரு அணியிலும் வீரர்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா உள்பட 4 பேருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்தத் தொடரில் செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியின் போது இருநாடுகளுக்கும் இடையேயான மோதல்கள், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை உள்ளிட்ட காரணங்களால், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி அகா இருவரும் போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்பு, டாஸ் உள்ளிட்டவற்றிலும் லீக் சுற்று, சூப்பர் 4 சுற்று போட்டியின் முடிவிலும் கைகுலுக்கவில்லை.
மேலும் போட்டி முடிவடைந்த பின்னரும் இரு அணி வீரர்களும் கைக்குலுக்கும் சம்பிரதாயங்களும் நிகழவில்லை. இது ஒருபுறம் இருக்க இந்த ஆட்டத்தின் போது பாகிஸ்தான் வீரர்கள் நடந்து கொண்ட விதம் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது.
போட்டியின் போது பாகிஸ்தான் வீரர்கள் சர்ச்சைக்குரிய அரசியல் நோக்கம் கொண்ட சைகைகளைச் செய்தனர். பாகிஸ்தான் வீரர் ஷாஹிப்ஸாதா ஃபர்ஹான் அரைசதம் அடித்ததும் தனது கிரிக்கெட் பேட்டை துப்பாக்கி போன்று வைத்து ரசிகர்களை நோக்கி சுடுவதை போன்று சைகை காட்டினார்.
இதுதொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு விமர்சிக்கப்பட்டன. ஷாஹிப்ஸாதா ஃபர்ஹானின் இந்த செயல் விளையாட்டின் மாண்பை சீர்குலைக்கும் வகையில் இருந்ததாக இந்திய ரசிகர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்த போது பாகிஸ்தான் பந்து வீச்சாளரான ஷாகீன் ஷா அப்ரிடி, ஷுப்மன் கில்லையும், ஹாரிஸ் ரௌஃப் அபிஷேக் சர்மாவையும் வம்புக்கு இழுத்தனர். களநடுவர் உடனடியாக தலையிட்டு இவர்களை விலக்கிவிட்டார்.
தொடர்ந்து ஹாரிஸ் ரௌஃப் எல்லைக்கோட்டுக்கு அருகே ஃபீல்டிங் செய்தபோது 0-6 என்ற சைகையையும், விமானம் ஒன்று மேலேழும்பி பின்னர் கீழே விழுந்து வெடித்துச் சிதறுவது போலவும் சைகை காட்டினார்.
கடந்த மே மாதம் நடந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் ராணுவ மோதலில் பாகிஸ்தான் ராணுவம், 6 இந்திய போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாகத் தெரிவிப்பது போலவும் இருந்ததாக இந்திய ரசிகர் கொதித்தெழுந்தனர்.
அபராதம்
அதைத் தொடர்ந்து இறுதிப்போட்டியில் ஹாரிஸ் ரௌஃப் விக்கெட்டை வீழ்த்திய ஜஸ்ப்ரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங் ரசிகர்களை நோக்கி போர் விமானம் மோதுவது போலவும் செய்தனர். இதனால், ஆசியக் கோப்பை நிர்வாகம் சார்பில் சூர்யகுமார் யாதவ், ஹாரிஸ் ரௌஃப் உள்ளிட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் மோதலில் ஈடுபட்டு, ஐசிசி விதிகளை மீறிய சூர்யகுமார் யாதவ், ஷாஹிப்ஸாதா ஃபர்ஹான், ஜஸ்ப்ரீத் பும்ரா ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதில், ஐசிசி வெளியிட்டுள்ள அறிக்கையில், “லீக் சுற்றின் அடிப்படையில் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹாரிஸ் ரௌஃப் இருவருக்கும் தலா 30 சதவிகிதம் அபராதமும், 2 தகுதியிழப்புப் புள்ளிகளும், ஷாஹிப்ஸாதா ஃபர்ஹானுக்கு 1 தகுதியிழப்புப் புள்ளியும், இறுதிப் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு ஒரு தகுதியிழப்பு புள்ளியும், ஹாரிஸ் ரௌஃபுக்கு மீண்டும் 30 சதவிகிதம் அபராதமும், 2 தகுதியிழப்புப் புள்ளிகளும் வழங்கப்பட்டன.
ஹாரிஸ் ரௌஃபுக்கு 4 தகுதியிழப்புப் புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளதால் அவர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் தடைசெய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.