முகப்பு
கிரிக்கெட்

டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு முடிவை ரோஹித் சர்மா, விராட் கோலி திரும்பப் பெறுகிறார்களா?

ஓய்வு முடிவை திரும்பப் பெற்று ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புகிறார்களா என்பது குறித்து...

Updated On : 30 நவம்பர், 2025 at 2:19 PM
ரோஹித் சர்மா - விராட் கோலி (கோப்புப் படம்)
பகிர்:

ஓய்வு முடிவை திரும்பப் பெற்று ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவுள்ளதாக வதந்தி பரவி வருகிறது.

தென்னாப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது.

இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணியை 2-0 என அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்க அணி. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஓய்வு பெற்றுவிட்டதால், இந்திய அணி மிகவும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தோல்விக்குப் பிறகு, பிசிசிஐ தரப்பிலிருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரையும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப் படுவதாக வதந்தி பரவியது.

இந்த நிலையில், ஓய்வு முடிவை திரும்பப் பெற்று ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவுள்ளதாக பரவும் வதந்தி குறித்து இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் படிக்கும் விஷயங்களை எல்லா நேரங்களிலும் நான் நம்புவது கிடையாது. ஆனால், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் ஓய்வு முடிவை திரும்பப் பெற்று, மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடவுள்ளதாக பரவும் செய்தியில் பாதி உண்மையிருந்தாலும் அந்த செய்திக்கு நாம் மிக மிக அதிக கவனம் கொடுக்க வேண்டும்.

இவர்கள் இருவரும் மீண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடினால், டெஸ்ட் கிரிக்கெட் எதிர்காலத்தில் அழிந்துவிடுமா என்ற தலைப்பு அதிகம் பேசப்படும் ஒன்றாக மாறிவிடும். டெஸ்ட் கிரிக்கெட்டினை காப்பாற்றுவதற்காக அவர்கள் இருவரும் மீண்டும் கண்டிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

இந்திய அணிக்காக 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 9230 ரன்களும், 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 4301 ரன்களும் எடுத்துள்ளனர்.

சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Whether Rohit Sharma and Virat Kohli will return to Test cricket after calling off their Test cricket retirements...

முழு கட்டுரையைப் படிக்க →