டெஸ்ட் போட்டிகளில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் அய்டன் மார்க்ரம் 3000 ரன்களைக் கடந்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லாகூரில் நேற்று (அக்டோபர் 12) தொடங்கியது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி அதன் முதல் இன்னிங்ஸில் 378 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது.
இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 216 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் டோனி டி ஸார்ஸி 81* ரன்கள், ரியான் ரிக்கல்டான் 71 ரன்கள் எடுத்தனர். கேப்டன் அய்டன் மார்க்ரம் 20 ரன்கள் எடுத்தார்.
முதல் இன்னிங்ஸில் 20 ரன்கள் எடுத்ததன் மூலம், டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்து மார்க்ரம் சாதனை படைத்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அணிக்காக இதுவரை 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மார்க்ரம், 3013 ரன்கள் குவித்துள்ளார். அதில் 8 சதங்கள் மற்றும் 13 அரைசதங்கள் அடங்கும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 152 என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.