அதீத தன்னம்பிக்கை வேண்டாம், சூழலுக்கேற்ப விளையாடுங்கள்; இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் அறிவுரை!
அதீத தன்னம்பிக்கையை கைவிட்டு இந்திய அணி சூழலுக்கேற்ப விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அறிவுரை வழங்கியுள்ளார்.
அதீத தன்னம்பிக்கையை கைவிட்டு இந்திய அணி சூழலுக்கேற்ப விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் அகமதாபாதில் நேற்று (பிப்ரவரி 22) நடைபெற்ற சூப்பர் 8 சுற்றுக்கான ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் மிக மோசமான தோல்வி இதுவாகும்.
Advertisement
Advertisement
அதீத தன்னம்பிக்கை வேண்டாம்...
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 ஆட்டத்தில் இந்திய அணி மிக மோசமான தோல்வியைத் தழுவிய நிலையில், அதீத தன்னம்பிக்கையை கைவிட்டு இந்திய அணி சூழலுக்கேற்ப விளையாட வேண்டும் என முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ஜியோஸ்டாரில் பேசியதாவது: தென்னாப்பிரிக்க அணியில் டேவிட் மில்லர் மற்றும் டெவால்ட் பிரேவிஸ் எப்படி பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார்கள் என்பதை பார்த்தோம். அவர்களைப் போல் இந்திய அணியும் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்க வேண்டும். ஆனால், இந்திய அணியின் பேட்டர்கள் அதனை செய்யவில்லை. அவர்கள் அதீத தன்னம்பிக்கையுடன் களமிறங்கி சந்திக்கும் எல்லாப் பந்துகளையும் அடித்து ஆட முயற்சி செய்து விக்கெட்டுகளை இழந்தனர்.
இந்திய அணியைக் காட்டிலும் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு தென்னாப்பிரிக்க அணி வெற்றியை வசமாக்கியது. இந்த வெற்றிக்கு தென்னாப்பிரிக்க அணி மிகவும் தகுதியானவர்கள். தென்னாப்பிரிக்க அணியின் இன்னிங்ஸிலிருந்து இந்திய அணி எதையும் கற்றுக் கொள்ளவில்லை.
இந்திய வீரர்கள் ஒவ்வொரு பந்தையும் பவுண்டரிக்கு விரட்ட முயற்சித்து ஆட்டமிழந்தனர். டி20 கிரிக்கெட்டினை அப்படி விளையாடக் கூடாது. எதிரணியிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். சவாலான ஆடுகளங்களில் எதிரணியால் நன்றாக ரன்கள் குவிக்க முடிகிறது என்றால், அதிலிருந்து இந்திய வீரர்கள் பாடம் கற்றுக்கொண்டு நன்றாக விளையாட வேண்டும்.
ஏமாற்றமளித்த திலக் வர்மா
திலக் வர்மா மிகவும் புத்திசாலித்தனமாக விளையாடக் கூடிய வீரர். ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடிய விதம் ஏமாற்றமளிக்கிறது. முதல் ஓவரில் இஷான் கிஷன் ஆட்டமிழந்துவிட்டார். ஓவருக்கு 9 ரன்களுக்கும் அதிகமாக தேவைப்பட்டதே தவிர, 15 ரன்கள் இல்லை. அதனால், திலக் வர்மா இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு பெரிய ஷாட்டுகளுக்கு முயற்சி செய்திருக்கலாம். மறுமுனையில் மூன்று ஆட்டங்களாக டக் அவுட்டாகி இந்தப் போட்டியில் ரன் கணக்கைத் தொடங்கியுள்ள அபிஷேக் சர்மா இருக்கையில், திலக் வர்மா பொறுப்புடன் விளையாடியிருக்க வேண்டும். ஆனால், அவர் அதை செய்யத் தவறிவிட்டார்.
பவர்பிளேவில் நீங்கள் எப்போதும் 70 ரன்கள் அடிக்க வேண்டும் என்பதில்லை. 55 அல்லது 60 ரன்களே நல்ல தொடக்கம்தான். அடுத்தப் போட்டியில் பிளேயிங் லெவனில் அர்ஷ்தீப் சிங்குக்குப் பதிலாக அக்ஷர் படேல் சேர்க்கப்படலாம். ஆனால், அர்ஷ்தீப் சிங் நன்றாக பந்துவீசியுள்ளதால், அவரை பிளேயிங் லெவனிலிருந்து நீக்குவார்களா எனத் தெரியவில்லை. ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றமிருக்காது என நினைக்கிறேன். ஆனால், மாற்றம் செய்ய விரும்பினால் வாஷிங்டன் சுந்தருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காமல் போகலாம் என உணர்கிறேன் என்றார்.
தென்னாப்பிரிக்க அணி பவர்பிளேவில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது, டேவிட் மில்லர் மற்றும் பிரேவிஸ் பார்ட்னர்ஷிப் அமைத்து 97 ரன்கள் எடுத்தனர். இதனால், தென்னாப்பிரிக்க அணியால் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 187 ரன்கள் எடுக்க முடிந்தது.
188 ரன்கள் என்ற இலக்கை துரத்திய இந்திய அணி பார்ட்னர்ஷிப் அமைக்கத் தவறி, 18.5 ஓவர்களில் 111 ரன்களுக்கு ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
The former captain of the Indian team has advised the Indian team to abandon overconfidence and play according to the circumstances.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.