உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஐசிசி மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 38.2 ஓவர்கள் முடிவில் 168 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் ஜியார்ஜியா பிலிம்மர் அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார். அவரைத் தொடர்ந்து, அமெலியா கெர் 35 ரன்களும், கேப்டன் சோஃபி டிவைன் 23 ரன்களும் எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் லின்சி ஸ்மித் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கேப்டன் நாட் ஷிவர் பிரண்ட் மற்றும் அலைஸ் கேப்சி தலா இரண்டு விக்கெட்டுகளையும், சார்லி டீன் மற்றும் சோஃபி எக்கல்ஸ்டோன் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து அபார வெற்றி
169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி, 29.2 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அந்த அணியில் தொடக்க வீராங்கனைகளான எமி ஜோன்ஸ் மற்றும் டம்மி பீமௌண்ட் அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இருப்பினும், டம்மி பீமௌண்ட் 38 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய எமி ஜோன்ஸ் அரைசதம் விளாசி அசத்தினார். அவர் 92 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். ஹீதர் நைட் 33 ரன்கள் எடுத்தார்.
நியூசிலாந்து தரப்பில் சோஃபி டிவைன் மற்றும் லீ தஹுஹு தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய எமி ஜோன்ஸுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.