ஆஸ்திரேலியாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயரின் உடல்நிலை சீராக உள்ளதாக இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
ஆனால், சில நாள்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் ஷ்ரேயாஸ் ஐயர் இருப்பார் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோதிய கடைசி ஒருநாள் போட்டியில், அலெக்ஸ் கேரி அடித்த பந்தை பின்னோக்கி ஓடிச் சென்று ஷ்ரேயாஸ் கேட்ச் பிடித்தார். அப்போது கீழே விழுந்த ஷ்ரேயாஸுக்கு இடது விலா எலும்பில் அடிபட்டது.
உடனடியாக அவரை பரிசோதித்த பிசிசிஐ மருத்துவர்கள், சிட்னியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் மண்ணீரலில் ரத்த கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, ஷ்ரேயாஸ் ஐயருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், ஷ்ரேயாஸ் ஐயருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் யாதவ், செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார்.
ஷ்ரேயாஸ் உடல்நிலைக் குறித்து சூர்ய குமார் யாதவ் பேசியதாவது:
“கடந்த இரண்டு நாளாக ஷ்ரேயாஸ் ஐயருடன் தொடர்பில் இருக்கிறோம். அவரின் உடல்நிலை சீராக இருக்கிறது. அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது முதலில் பதிலளிக்கவில்லை. தற்போது அனைவருக்கு அவர் பதிலளித்து வருகிறார்.
அவரது உடல்நிலையை மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். சில நாள்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து இருப்பார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமான காயம் என்றும் மிகவும் அரிதான தருணங்களிலேயே இதுபோன்று நடக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடவுளின் ஆசியுடன் நன்றாக குணமடைந்து வருகிறார். பிசிசிஐ ஷ்ரேயாஸுக்கு முழு ஆதரவு அளித்து வருகின்றது. நாங்கள் அவரை வீட்டுக்கு அழைத்துச் செல்வோம்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.