இலங்கை அணி ஆசிய கோப்பை நடப்பு சாம்பியனா? என்ன சொல்கிறார் சரித் அசலங்கா?
இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா இலங்கை அணியை ஆசிய கோப்பை நடப்பு சாம்பியன் எனக் கூறியுள்ளது குறித்து...
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சாம்பியன் இலங்கை அணி என அந்த அணியின் கேப்டன் சரித் அசலங்கா கூறியுள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் அபு தாபியில் இன்று (செப்டம்பர் 13) நடைபெறும் போட்டியில் இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் மோதுகின்றன. வங்கதேச அணி ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் வெற்றியை ஏற்கனவே பதிவு செய்துவிட்ட நிலையில், இன்று தனது முதல் போட்டியில் இலங்கை அணி விளையாடுகிறது.
இந்த நிலையில், மனதளவில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சாம்பியன் இலங்கை அணியே என அந்த அணியின் கேப்டன் சரித் அசலங்கா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: மனதளவில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சாம்பியன் இலங்கை அணி என்பது உண்மையில் நல்ல விஷயமாக இருக்கிறது. அபு தாபியில் உள்ள ஆடுகளங்கள் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும் என நினைக்கிறேன். பந்து மென்மையாக மாறிய பிறகு, பேட்டர்கள் எந்த ஒரு சிரமமுமின்றி எளிமையாக ரன்கள் குவிக்க முடியும். பேட்டர்கள் அனைவரும் அபு தாபியில் விளையாட வேண்டும் என்பதை விரும்புவார்கள் என்றார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நடப்பு சாம்பியன் இந்திய அணி என்ற போதிலும், நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் டி20 வடிவில் நடத்தப்படுவதால், கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 வடிவில் நடத்தப்பட்ட தொடரில் இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றதால் இலங்கை அணியின் கேப்டன் சரித் அசலங்கா அந்த அணியை நடப்பு சாம்பியன் எனக் கூறியுள்ளார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஒருநாள் வடிவில் நடத்தப்பட்டதும், அதில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.