டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது தொடர்பாக பாகிஸ்தான் அரசு மற்றும் கிரிக்கெட் வாரியம் என்ன முடிவெடுத்தாலும் அதனை பின்பற்றுவோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா தெரிவித்துள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. பிரதான போட்டிகளுக்கு முன்பாக அணிகள் தங்களுக்குள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகின்றன.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் ஒரு சில நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்போம். ஆனால், இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது புதிய பிரச்னையை கிளப்பியுள்ளது. பாகிஸ்தான் அரசு மற்றும் அந்நாட்டின் கிரிக்கெட் வாரியத்தின் இந்த முடிவை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் உள்பட பலரும் கடுமையாக விமர்சித்தனர்.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவது தொடர்பாக பாகிஸ்தான் அரசு மற்றும் கிரிக்கெட் வாரியம் என்ன முடிவெடுத்தாலும் அதனை பின்பற்றுவோம் என பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் அலி அகா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இடம்பெற்று நாங்கள் விளையாடுகிறோம். பாகிஸ்தான் அரசு மற்றும் கிரிக்கெட் வாரியம் என்ன முடிவெடுத்தாலும் அதனை நாங்கள் பின்பற்றுவோம். எங்களுக்கு 3 குரூப் போட்டிகள் உள்ளன. அந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற முயற்சி செய்வோம் என்றார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரின் போட்டிகளை இந்தியாவில் விளையாட மறுத்ததால் வங்கதேச அணி தொடரிலிருந்து நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக ஸ்காட்லாந்து மாற்று அணியாக சேர்க்கப்பட்டது. இந்த விவகாரத்தில் வங்கதேசத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிக்கும் பாகிஸ்தான் அரசின் முடிவுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்கள் ஷாகித் அஃப்ரிடி, முகமது யூசுஃப் மற்றும் ரஷீத் லாட்டிஃப் மற்றும் முன்னாள் வீரர்கள் மொயின் கான், சர்ஃபராஸ் அகமது மற்றும் மோஷின் கான் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதி கொழும்புவில் நடைபெறும் விதமாக அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.