ஐபிஎல்: வருண் சக்ரவர்த்தியை மெச்சிய விராட் கோலி
சிறப்பாகப் பந்துவீசிய வருண் சக்ரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.
ஆர்சிபி அணிக்கு எதிராகச் சிறப்பாகப் பந்துவீசி ஆட்ட நாயகன் விருதை வென்ற வருண் சக்ரவர்த்தியை கேப்டன் விராட் கோலி பாராட்டியுள்ளார்.
கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி அணி வீரர்கள் மோசமாக விளையாடித் தோற்றார்கள். கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை வீழ்த்தியது.
அபுதாபியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூா் 19 ஓவா்களில் 92 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்து ஆடிய கொல்கத்தா 10 ஓவா்களில் 1 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் அடித்து வென்றது. வருண் சக்ரவா்த்தியும் ரஸ்ஸலும் தலா 3 விக்கெட்டுகள் எடுத்து ஆர்சிபி அணியை நிலைகுலைய வைத்தார்கள். படிக்கல் மட்டும் அதிகபட்சமாக 22 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரராகக் களமிறங்கிய கோலி 5 ரன்களிலும் மேக்ஸ்வெல் 10 ரன்களிலும் டி வில்லியர்ஸ் ரன் எடுக்காமலும் ஆட்டமிழந்தார்கள். பின்னா் கொல்கத்தா இன்னிங்ஸில் ஷுப்மன் கில் - வெங்கடேஷ் ஐயா் ஜோடி அபாரமாக ஆடி அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டது. ஷுப்மன் கில் 48 ரன்களும் வெங்கடேஷ் ஐயர் ஆட்டமிழக்காமல் 41 ரன்களும் எடுத்தார்கள்.
சிறப்பாகப் பந்துவீசிய வருண் சக்ரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது.
நான்கு ஓவர்கள் வீசிய வருண் சக்ரவர்த்தி 13 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதில் 15 பந்துகளில் அவர் ரன் எதுவும் கொடுக்கவில்லை.
இந்த வெற்றியினால் புள்ளிகள் பட்டியலில் 7-ம் இடத்தில் இருந்த கொல்கத்தா, 5-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி அணி தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது.
இந்நிலையில் வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சு பற்றி ஆர்சிபி கேப்டன் விராட் கோலி கூறியதாவது:
வருண் சக்ரவர்த்தி நன்றாகப் பந்துவீசினார். இந்தியாவுக்காக விளையாடும்போது முக்கியமான வீரராக இருப்பார். சர்வதேச அளவில் வாய்ப்பு கிடைப்பது அபாரமானது. இந்தியாவுக்காக விளையாடப்போகிற வீரர் அவர். இது நல்ல விஷயம் என்றார்.