மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்த தனக்கு உதவுவதற்கு ரோஹித் சர்மா உள்ளதாக ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக ஹார்திக் பாண்டியா குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்தி வந்த நிலையில், இந்த ஆண்டு மும்பை அணியின் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டார். மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வந்த நிலையில், அவரிடமிருந்து திடீரென கேப்டன் பொறுப்பு ஹார்திக் பாண்டியாவுக்கு கொடுக்கப்பட்டதால் அவரது ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்த தனக்கு உதவுவதற்கு ரோஹித் சர்மா உள்ளதாக ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: கேப்டன் பொறுப்பில் ரோஹித் சர்மா இல்லாதது பெரிய அளவில் வித்தியாசத்தை ஏற்படுத்தப் போவதில்லை. அவர் அணியில் எனக்கு உதவுவதற்காக எப்போதும் என்னுடன் இருக்கிறார். அவரது தலைமையில் சிறப்பாக செயல்பட்டு கோப்பைகளை வென்றுக் குவித்த மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிப் பயணத்தை தொடர வேண்டிய பொறுப்பு எனக்கு உள்ளது என்றார்.
மும்பை தனது முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.