யுவ்ராஜ் சிங் திருமணத்துக்கு மோடி வருவார்; தந்தை வரமாட்டார்!
நவம்பர் 30 அன்று லண்டனைச் சேர்ந்த நடிகை ஹசல் கீச்சைக் காதல் திருமணம் செய்கிறார் கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங்.
நவம்பர் 30 அன்று லண்டனைச் சேர்ந்த நடிகை ஹசல் கீச்சைக் காதல் திருமணம் செய்கிறார் கிரிக்கெட் வீரர் யுவ்ராஜ் சிங்.
பிரதமர் மோடியை நேரில் சென்று திருமணத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் யுவ்ராஜ். இதனால் பஞ்சாபில் நடைபெறுகிற திருமணத்துக்கு மோடி வருகை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் என 50 பேர் மட்டுமே கலந்துகொள்ளும் இந்தத் திருமணத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என யுவ்ராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் முடிவெடுத்துள்ளார்.
இதுகுறித்து யோக்ராஜ் சிங் அளித்த பேட்டியில், என் மகனின் திருமணத்தில் நான் கலந்துகொள்ளமாட்டேன். இந்தத் திருமணம் சீக்கிய குருக்கள் முன்னிலையில் நடைபெறுவதால் நான் கலந்துகொள்ளவேண்டாம் என முடிவெடுத்துள்ளேன். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் மதக் குருக்கள் மீது கிடையாது. அதேசமயம் 29-ம் தேதி நடைபெறும் மெஹந்தி/ வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வேன் என்று கூறியுள்ளார். யுவ்ராஜ் சிங்கின் தந்தையும் தாயும் சிலவருடங்களுக்கு முன்பு விவாகரத்து பெற்றார்கள். இதையடுத்து தன் தாயுடன் வாழ்ந்துவருகிறார் யுவ்ராஜ் சிங்.
நவம்பர் 29 அன்று சண்டிகரில் முதல் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. டெஸ்ட் போட்டி, நான்கு நாளில் முடிவடைந்துவிட்டால், மொஹலியில் உள்ள இந்திய, இங்கிலாந்து வீரர்கள் வரவேற்பில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 30-ம் தேதி நடைபெறுகிற திருமணத்துக்கு சச்சின் வருகை தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 7 அன்று டெல்லியில் பெரிய அளவில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.