இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, தொடரையும் கைப்பற்றியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 158 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் 183 ரன்களுக்கு சுருண்ட நிலையில், "பாலோ-ஆன்' பெற்று 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 116.5 ஓவர்களில் 386 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்நிலையில், ஐசிசி விதிமுறையை மீறியதற்காக இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவுக்கு பல்லகெலேவில் நடைபெறவுள்ள 3-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை 2-ஆவது இன்னிங்ஸில் பேட் செய்தபோது 58-ஆவது ஓவரை வீசினார் ஜடேஜா. அப்போது இலங்கை வீரர் கருணாரத்னே கிரீஸுக்குள் நின்ற நிலையில், பந்தை ஸ்டெம்பை நோக்கி எறிந்தார். அதை அபாயகரமானது எனக்கூறி ஜடேஜாவை எச்சரித்தார் நடுவர். கடந்த 24 மாதங்களில் 6-ஆவது முறையாக ஐசிசி விதிமுறையை மீறியிருக்கிறார் ஜடேஜா. இதையடுத்து அவர், 3-ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாட தடை விதித்துள்ள ஐசிசி, அவருடைய போட்டி ஊதியத்தில் 50 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது.
இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவுக்குப் பதிலாக அக்ஷர் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 30 ஒருநாள், 7 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அக்ஷர் படேல், இதுவரை டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகவில்லை.