மொஹலி ஒருநாள் போட்டியுடன் ஓய்வுபெறவுள்ள தோனி என்கிற மோப்ப நாய்!
மொஹலி காவல்துறையில் பாதுகாப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் தோனி என்கிற மோப்ப நாய்...
மொஹலி காவல்துறையில் பாதுகாப்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் தோனி என்கிற மோப்ப நாய் டிசம்பர் 13 அன்று மொஹலியில் நடைபெறுகிற இந்தியா - இலங்கை இடையிலான ஒருநாள் போட்டியுடன் பணியிலிருந்து ஓய்வுபெறுகிறது.
மொஹலி மாவட்டக் காவல்துறையில் கடந்த 10 வருடங்களாகப் பணியாற்றி வரும் இந்த நாயுடன் இணைந்து ஜான், ப்ரீத்தி என்கிற இதர இரு மோப்ப நாய்களும் அதே நாளில் ஓய்வு பெறவுள்ளன.
ஓய்வுக்குப் பிறகு லேப்ரடார் இனத்தைச் சேர்ந்த இந்த தோனி நாய், ஏலத்தில் விடப்படும். இதன் அடிப்படைத் தொகை ரூ. 800 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
2007-ல் காவல்துறையில் பணியாற்றத் தொடங்கிய தோனி நாய், பல வழக்குகளில் முக்கியப் பங்காற்றியுள்ளது. அதேபோல மொஹலி கிரிக்கெட் மைதானத்தின் பாதுகாப்புச் சோதனைகளுக்கும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. 2011 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதியபோது இரு நாட்டுப் பிரதமர்களும் நேரில் வந்து அப்போட்டியில் கலந்துகொண்டார்கள். அப்போதும் இந்த நாய் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது.
தோனி நாய்க்கு மூன்று மாதங்களாக இருந்தபோது மொஹலி காவல் துறையில் இணைந்துள்ளது. பிலாலுர் பயிற்சியகத்தில் பயிற்சி பெற்றது.
தினமும் 3 லிட்டர் பால், 20 முதல் 30 முட்டைகள் வரை சாப்பிடும் தோனி நாய், கிரிக்கெட் போட்டி நடைபெறும் சமயத்தில் ஓய்வு பெறவுள்ளதால் அதற்கு அதிகக் கவனம் கிடைத்துள்ளது.